கூட்டுறவு வங்கியில் ஓட்டுப் பெட்டியில் மை ஊற்றிய மர்ம நபர்கள்...தேர்தல் ரத்தானதால் திமுகவினர் அதிருப்தி...
காஞ்சிபுரம்
காஞ்சீபுரத்தில் உள்ள கூட்டுறவு வங்கியில் ஓட்டுப்பெட்டியில் மர்ம நபர்கள் மை ஊற்றியதால் தேர்தல் ரத்தானது.
காஞ்சிபுரம் மாவட்டம், சின்ன காஞ்சீபுரம் நகர கூட்டுறவு வங்கியில் கூட்டுறவு சங்க நிர்வாகக்குழு உறுப்பினர்களின் தேர்தல் நேற்று நடந்து வந்தது. அப்போது, மர்ம நபர்கள் உள்ளே நுழைந்து வாக்குச் சீட்டுகளை கிழித்து, ஓட்டுப் பெட்டியில் மை ஊற்றி சேதப்படுத்தினர்.
இதனைத் தடுத்த தேர்தல் பணியாளர்களையும் அவர்கள் சரமாரியாக தாக்கினர். இதனையடுத்து கூட்டுறவு சங்க தேர்தல் ரத்து ஆனதாக அறிவிக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த தி.மு.க.வினர் ஆளும் கட்சியினர்தான் ஓட்டுப்பெட்டியை சேதப்படுத்தினர் என்று கூறி வங்கியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்திற்கு காஞ்சீபுரம் எம்.எல்.ஏ. எழிலரசன் தலைமைத் தாங்கினார். இதில் நகரச் செயலாளர் ஆறுமுகம், மாவட்ட பொருளாளர் சுகுமார், தலைமை செயற்குழு உறுப்பினர் சேகர் உள்ளிட்டோர் பங்கேற்று வங்கியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.