முத்துராமலிங்க தேவர் பெயரை மதுரை விமான நிலையத்திற்கு வைக்கலென்னா இதுதான் நடக்கும் - மிரட்டும் மூவேந்தர் முன்னணி...
மதுரை
வருகிற மார்ச் 15-ஆம் தேதிக்குள் முத்துராமலிங்க தேவர் பெயரைச் சூட்ட பரிந்துரைக்காவிட்டால் தென் மாவட்டத்தில் உள்ள தமிழக அமைச்சர்களின் வீடுகளை முற்றுகையிடுவோம் என்று அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழக நிறுவனர் மருத்துவர் சேதுராமன் தெரிவித்தார்.
மதுரை மாவட்டத்தில், அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைப்பெற்றது. இந்தக் கூட்டத்தில் நிறுவனர் தலைவர் மருத்துவர் சேதுராமன் பங்கேற்றார்.
கூட்டத்திற்கு பின்னர் மருத்துவர் சேதுராமன் செய்தியாளர்களிடம் கூறியது:
“மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெயரை சூட்ட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இதற்காக பல போராட்டங்களையும் நடத்தி இருக்கிறோம்.
தமிழகத்தில் தலைவர்கள் பெயர் சூட்டுகிற கொள்கை இல்லை என்று பலர் கூறுகின்றனர். மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திற்கு மட்டும் எம்.ஜி.ஆர். பெயரையும், வைகை புதிய பாலத்திற்கு ஜெயலலிதா பெயர் சூட்டி உள்ளதுபோல பசும்பொன் தேவர் பெயரை சூட்டுவதில் என்ன தவறு இருக்கிறது?
தமிழக அரசு, வேறு சிலரை தூண்டிவிட்டு பசும்பொன் தேவர் பெயரை சூட்டும் வாய்ப்பை தடுத்து நிறுத்துகிறது.
வருகிற மார்ச் 15-ஆம் தேதிக்குள் பசும்பொன் தேவர் பெயரை சூட்ட பரிந்துரை செய்ய வேண்டும். அப்படி இல்லையென்றால் தென் மாவட்டத்தில் உள்ள தமிழக அமைச்சர்களின் வீடுகளை முற்றுகையிடுவோம்.
பேருந்து கட்டண உயர்வை கண்டித்து தி.மு.க. அறிவித்துள்ள போராட்டத்திற்கு அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம் ஆதரவு அளிக்கிறது. இந்தப் போராட்டத்தில் அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம் பங்கேற்கும்” என்று அவர் கூறினார்.