mother and child death in hospital
அரசு மருத்துவமனையில் டாக்டர்களின் அலட்சித்தால் பிறந்த குழந்தையும், தாயும் பரிதாபமாக இறந்தனர். இதனால், உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் காஞ்சிபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே வட ஆளவந்தான் புதூரை சேர்ந்தவர் வேலு. கூலி தொழிலாளி. பவானி (25). இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. தற்போது, பவானி நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார்.
கடந்த 22ம் தேதி, பவானிக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரை, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அங்கு ரம்ஜான் உள்பட பல்வேறு காரணங்களால் டாக்டர்கள் விடுப்பில் இருந்துள்ளனர். இதனால், அங்கிருந்த மருத்துவ ஊழியர்கள், பவானிக்கு பிரசவ வலியை குறைக்க ஊசி போட்டுள்ளனர்.
இதைதொடர்ந்து நிலைமை மோசமாகி கொண்டே போனதால், கடந்த 30ம் தேதி அறுவை சிகிச்சை மூலம் பவானிக்கு பிரசவம் பார்த்தனர். அறுவை சிகிச்சை முடிந்த பின்னர் தாயும், குழந்தையும் மூச்சு பேச்சு இல்லாமல் இருந்தனர். இதையடுத்து, செயற்கை சுவாச கோளாறு அமைத்து, 2 பேரையும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு வென்டிலேட்டரில் வைக்கப்பட்ட குழந்தை நேற்று முன்தினம் இறந்தது. இதையடுத்து தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த பவானி, இன்று காலை பரிதாபமாக இறந்தனர். இதனால், ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள், உரிய முறையில் சிகிச்சை அளிக்காததால், பவானி இறந்தார் என கூறி மருத்துவமனையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். மேலும், அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுதொடர்பாக விஷ்ணுகாஞ்சி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். இதுதொடர்பாக மாவட்ட எஸ்பி அலுவலகத்திலும், கலெக்டர் அலுவலகத்திலும் உறவினர்கள் புகார் அளித்துள்ளனர்.
