யானை தாக்கி பலியானோரின் குடும்பத்திற்கு காசோலைகள் வழங்கி அமைச்சர்கள் நேரில் ஆறுதல்
கோவை போத்தனூர் அருகே காட்டு யானை தாக்கியதில் பலியானோரின் 4 குடும்பங்களுக்கு முதலமைச்சர் ஒதுக்கிய நிதியுதவிக்கான காசோலையை அமைச்சர்கள் நேரில் சென்று வழங்கி ஆறுதல் கூறினர்.
கோவை- கணேசபுரத்தை சேர்ந்தவர் ஜோசியர் விஜயகுமார். இவரது மகள் காயத்ரி. இருவரும் வீட்டின் வெளியே தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது குடியிருப்புப் பகுதியில் நுழைந்த ஒற்றை காட்டு யானை காயத்ரியை தாக்கியது. . இதில் சம்பவ இடத்திலேயே அவர் பலியானார்.
அப்போது காயத்ரியை காப்பாற்ற முயன்ற விஜயகுமாரை யானை தூக்கி வீசியதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதையடுத்து யானையை பிடிக்க வனப்பகுதிக்குள் சென்ற பழனிச்சாமி என்பவரையும் யானை தாக்கியது. அதில் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
இதனைத் தொடர்ந்து வெள்ளலூர் பகுதியில் நுழைந்த காட்டு யானை எதிரில் வருவோரை எல்லாம் தாக்கியது. இதில் ஜோதிமணி, நாகரத்தினம் ஆகியோர் யானை மிதித்ததில் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த 5 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் வனத் துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று யானையை காடுக்குள் விரட்டியடிக்க முயற்சி மேற்கொண்டனர்.
இதையடுத்து யானைக்கு மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் யானையை பிடித்துள்ளனர்.
இதனிடையே யானை தாக்கி பலியானோரின் குடும்பங்களுக்கு தலா 4 லட்சம் வழங்கி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டார்.
இந்நிலையில், நிதியுதவிக்கான காசோலையை அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் வேலுமணி பலியானோரின் குடும்பங்களுக்கு வழங்கி நேரில் ஆறுதல் கூறினார்.
பின்னர், செய்தியாளர்களை சந்தித்த திண்டுக்கல் சீனிவாசன், 4 பேரின் குடும்பத்தினருக்கு அரசு இயன்ற உதவிகளை செய்யும் எனவும், யானைகள் ஊருக்குள் வராதவாறு நடவடிக்கை எடுக்கபடும் எனவும் தெரிவித்தார்.