காரிமங்கலம்
தொகுதி மக்கள் ஆதரிப்பவரையே அமைச்சர் அன்பழகனும் ஆதரிக்க வேண்டும் என்று காரிமங்கலம் ஒன்றிய அதிமுக செயலாளர் குமார் தெரிவித்தார்.
தமிழகத்தில் ஆட்சி அமைக்கப் போவது சசிகலாவா? ஒபிஎஸ்ஸா? என்று கட்சிக்குள் மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், பெரும்பாண்மை நிரூபிப்பேன் என்று ஒபிஎஸ்ஸும், எம்.எல்.ஏக்களின் ஆதரவு எனக்கு தான் என்று சசிகலாவும் சொல்லிக்கொண்டு இருக்கின்றனர்.
இந்த நிலையில், தொகுதி மக்களின் கருத்திற்கு மதிப்பளித்து எம்.எல்.ஏக்கள் ஆதரவு தர வேண்டும் என காரிமங்கலம் ஒன்றிய அதிமுக செயலாளர் குமார் தெரிவித்தார்.
மேலும், அவர் தெரிவித்ததாவது:
“மறைந்த ஜெயலலிதா, தனக்கு சிக்கல் ஏற்பட்ட நேரத்தில், பன்னீர் செல்வத்தை தான் முதல்வராக அடையாளம் காட்டினார்.
ஜெயலலிதா இருக்கும்போது ஒதுக்கப்பட்டவர்கள் ஒபிஎஸ்க்கு ஆதரவு தெரிவிக்கின்றனர்.
ஜெயலலிதா மறைவுக்கு பின் அவருடன் இருந்தவர்கள் இன்று கட்சியையும், ஆட்சியையும் கைப்பற்ற நினைக்கின்றனர்.
இதற்கு முட்டுக்கட்டை போடும் வகையில், முதல்வர் பன்னீர்செல்வம் எடுத்துள்ள நடவடிக்கைக்கு, அதிமுக தொண்டர்கள் மத்தியில் வரவேற்பு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, காரிமங்கலம் ஒன்றியத்துக்கு உட்பட்ட மக்களின் கருத்தை கேட்டு, அவர்களின் கருத்துக்கு தொகுதி எம்.எல்.ஏக்கள் மதிப்பளிக்க வேண்டும்.
இதையடுத்து, நான் மட்டுமன்றி, என்னுடன் காரிமங்கலம் ஒன்றியத்தை சேர்ந்த ஒன்றிய மற்றும் கிளை நிர்வாகிகள் அனைவரும், முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளோம்.
எனவே, அமைச்சர் அன்பழகன் தற்போது வேறிடத்தில் இருக்கும் நிலையில், தனது தொகுதி மக்களின் எண்ணங்களுக்கு மதிப்பளித்து, மக்களின் ஆதரவு பெற்ற முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவிக்க முன்வர வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.
