Minister of Labor Welface House sieged by Workers
வேலூர்
கடந்த ஆறு மாதங்களாக சம்பளம் மற்றும் போனஸ் வழங்காததால் நடவடிக்கை எடுக்க கோரி வேலூரில், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் அலுவலகத்தை முற்றுகையிட்டுதனியார் தோல் தொழிற்சாலை தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலூர் மாவட்டம், ஆம்பூர் அருகே சோலூரில் தனியார் தோல் தொழிற்சாலை ஒன்று உள்ளது. இங்கு 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். அவர்களுக்கு கடந்த ஆறு மாதங்களாக சம்பளம் மற்றும் போனஸ் வழங்கவில்லையாம.
இந்த நிலையில் தொழிற்சாலையில் உள்ள எந்திரங்கள் எடுத்துச் செல்லப்பட்டுவிட்டதால் தொழிலாளர்கள் வேலை இல்லாமலும் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதனால் தொழிலாளர்கள் சம்பளம் மற்றும் போனஸ் கேட்டு மாவட்ட ஆட்சியர் மற்றும் தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் தொடர்ந்து புகார் கொடுத்து வந்தனர்.
இந்த நிலையில், நேற்று காலை 11 மணியளவில் சுமார் 400 தொழிலாளர்கள் திடீரென வாணியம்பாடியில் உள்ள தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் அலுவலகத்தை முற்றுகையிட்டு, அலுவலக நுழைவு வாயில் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்ததும் வருவாய் துறையினரும், காவலாளர்களும், தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது அவர்கள், "அமைச்சர் நிலோபர் கபில் தற்போது ஊரில் இல்லை, அமைச்சர் வந்தவுடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொள்ளலாம் அதுவரை போராட்டத்தை கைவிட வேண்டும்"என்று கோரிக்கை வைத்தனர்.
ஆனால், தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட மறுத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், வாணியம்பாடி, ஆம்பூர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
