பள்ளி மாணவர்களுக்கு டிசம்பர் 25  முதல் ஜனவரி 2 ஆம் தேதிவரை அரையாண்டு விடுமுறை விடப்படுவதாக பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

பள்ளி மாணவர்களுக்கு டிசம்பர் 25 முதல் ஜனவரி 2 ஆம் தேதிவரை அரையாண்டு விடுமுறை விடப்படுவதாக பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று காரணமாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதை அடுத்து மாணவர்களுக்கு ஆன்லைன் வாயிலாகவும் கல்வி தொலைக்காட்சி வாயிலாகவும் வகுப்புகள் எடுக்கப்பட்டன. இந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையின் தாக்கம் குறைந்ததை அடுத்து, பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. தற்போது பொது மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, பள்ளி, கல்லூரி மாணவர்களின் நலன் கருதி, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி, பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. முதலில் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வரையிலான வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன.

இதனை தொடர்ந்து ஒன்றாம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை என அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிக்கள் திறக்கப்பட்டன. தொடக்க பள்ளிகள் நவம்பர் ஒன்றாம் தேதியிலிருந்து திறக்கப்பட்டன. மாணவர்கள் பள்ளி செல்ல ஆரம்பித்த சூழலில் வடகிழக்கு பருவமழை காரணமாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செலங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் மாணவர்கள் பள்ளிகளுக்கு செல்ல முடியாத நிலை உருவானது. இதற்கிடையே, பள்ளிகள் தாமதமாக திறக்கப்பட்டதால் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வை பள்ளிக் கல்வித் துறை ரத்து செய்தது. அதற்கு மாறாக டிசம்பர் மாத இறுதியில் திருப்புதல் தேர்வு நடக்குமென அறிவிக்கப்பட்டது. அதேசமயம் அரையாண்டு தேர்வு விடுமுறையை ரத்து செய்ய பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதனால் மாணவர்களும், பெற்றோர்களும் கவலையடைந்தனர்.

இந்த சூழலில் டிசம்பர் 25 ஆம் தேதி முதல் ஜனவரி 2 ஆம் தேதிவரை அரையாண்டு தேர்வு விடுமுறை விட வேண்டுமென தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்நிலையில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருநெல்வேலியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பள்ளி மாணவர்களுக்கு நாளை மறுநாள் (டிசம்பர் 25) முதல் ஜனவரி 2 ஆம் தேதிவரை அரையாண்டு விடுமுறை விடப்படுகிறது என்று தெரிவித்தார். மேலும், மாணவர்கள் பேருந்து படிக்கட்டில் பயணம் செய்வதை தடுக்க பேருந்துகளில் கதவுகள் அமைக்கப்படும் என்றும் பள்ளிகளில் மாணவர்கள் சமூக இடைவெளியுடன் அமர வைக்கப்படுவார்கள் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார். பள்ளிகல்வித்துறை அமைச்சரின் விடுமுறை அறிவிப்பால் பள்ளி மாணவர்கள் குஷி அடைந்துள்ளனர்.