தீரன் பட பாணியில் களமிறங்கும் கொள்ளை கும்பல்..? - அரக்கோணம் அருகே துணிகரம்
ராணிப்பேட்டை மாவட்டம் அவினாசிகண்டிகையில் ஊருக்கு ஒதுக்குபுறமாக இருந்த வீட்டில் வசித்த 3 பெண்கள் உட்பட 4 பேரை துப்பாக்கியால் சுட்டு நகை பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரக்கோணத்தை அடுத்த கன்னிகாபுரம் கிராமத்தில் புஷ்கரன் என்பரின் வீட்டில்தான் இந்த கொள்ளைச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. புஷ்கரன் தனது தாய், பாட்டி,பெரியம்மா ஆகியோருடன் வசித்து வருவதாக கூறப்படுகிறது. வெள்ளிக்கிழமையன்று இரவு அவரது வீட்டை மர்ம நபர்கள் சிலர் வேகமாக தட்டியுள்ளனர். மேலும் கணக்காளர் புஷ்கர், அவரது தாய், பாட்டி, பெரியம்மா ஆகியோரை மர்மநபர்கள் மூன்று பேர் நாட்டு துப்பாக்கியால் சுட்டு 25 சவரன் நகை மற்றும் 60 ஆயிரம் ரூபாய் ரொக்கத்தை கொள்ளையடித்து சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் காவல்துறையினர் தகவல் தெரிவிக்கபட்டு, காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சையாக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்மநபர்கள் ஆங்கிலம், இந்தி மொழிகளில் பேசியதாக கூறப்படும் நிலையில் வடமாநிலத்தவர்களாக இருக்கலாம் எனும் கோணங்களில் போலீசார் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.
மேலும் முன்னதாக பயங்கரமாக கதவு தட்டும் சத்தம் கேட்டு பயந்து போன புஷ்கரன் கதவைத் திறக்காமல் யார் என்று கேட்டுள்ளார். அப்போது பதில் அளிக்காத மர்ம நபர்கள் கதவை அரிவாளால் வெட்டி உடைக்க முயன்றுள்ளனர். சுதாரித்துக்கொண்ட புஷ்கரனும் தாயாரும் கதவை திறக்க மறுத்துள்ளனர். கதவை உடைக்க முடியாமல் போகவே மர்ம கொள்ளை கும்பல் கதவு வழியாக நாட்டுத் துப்பாக்கியால் சுட்டதில் அதில் வீட்டில் இருந்தவர்கள் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து உள்ளே நுழைந்த கொள்ளையர்கள் 25 சவரன் நகை மற்றும் 40 ஆயிரம் ரொக்கத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். திரைப்பட பாணியில் தனியாக இருந்த வீட்டில் நடைபெற்ற கொள்ளை சம்பவம் அரக்கோணம் அருகே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் கார்த்தி நடித்த தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தில் தனியாக இருக்கும் வீடுகளைக் குறி வைத்து வட மாநில கொள்ளையர்கள் நகை பணத்தை கொள்ளையடித்து விட்டு வீட்டு உரிமையாளர்களை கொலை செய்து விடுவார்கள். கொள்ளையர்கள் படு பயங்கரமான ஆயுதங்களால் தாக்கி கொலை செய்து விட்டு நகை பணத்தை கொள்ளையடித்துச் செல்வது வழக்கம். அவர்களின் கொள்ளை பாணியே படு பயங்கரமாக இருக்கும். அது போன்ற ஒரு கொள்ளைச் சம்பவம் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே நிகழ்ந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.