மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது. இதனால், பருவமழை கை கொடுக்குமா என விவசாயிகள் வேதனையுடன் காத்திருக்கின்றனர்.
மேட்டூர் அணையில் இருந்து ஆண்டு தோறும் ஜூன் 12ம் தேதி காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பது வழக்கம். இந்த ஆண்டு மேட்டூர் அணையில் நீர் இருப்பு குறைவாக இருந்ததால் குறித்த நேரத்தில் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை.
ஆனால், சுமார் 3 மாதங்கள் காலதாமதமாக கடந்த மாதம் 20ம் தேதி சம்பா சாகுபடிக்காக அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. அப்போது அணையின் நீர்மட்டம் 87.92 அடியாக இருந்தது. நீர்வரத்து இல்லாத நிலையில் அணையில் இருந்து பாசனத்துக்காக தொடர்ந்து வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது.
இதனால் அணையின் நீர்மட்டம் குறைந்து கொண்டே வருகிறது. இதற்கிடையே, பாசனத்துக்கு தண்ணீர் தேவை அதிகரித்ததால் கடந்த 13ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு வினாடிக்கு 18 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.
இந்நிலையில் அணையில் நீர்இருப்பு குறைந்து கொண்டே வருவதால், குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு நேற்று காலை 10 மணி முதல் டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது.
அப்போது அணைக்கு வினாடிக்கு 7 ஆயிரத்து 51 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. நீர்திறப்பைவிட அணைக்கு வரும் தண்ணீரின் அளவு குறைவாக உள்ளதால் நீர்மட்டம் குறைந்து கொண்டே வருகிறது.
நேற்றைய நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 64.65 அடியாக குறைந்தது. வடகிழக்கு பருவமழை கைகொடுக்காவிட்டால் அணையில் உள்ள நீர்இருப்பு சம்பா சாகுபடிக்கு முழுமையாக கிடைக்குமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது.
