metric school doing robbery in high fees people complain ...

தஞ்சாவூர்

கும்பகோணத்தில் உள்ள மெட்ரிக் பள்ளியில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலிப்பது மட்டுமின்றி, குறிப்பிட்ட துணிக்கடையில் தான் பள்ளி சீருடைகளை வாங்கனும் என்று அதிலும் கொள்ளையடிக்கின்றனர் என்று ஆட்சியரிடம் மக்கள் புகார் அளித்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் கும்பகோணம் மேலக்காவேரியைச் சேர்ந்த மக்கள் ஒன்றைக் கொடுத்தனர். அந்த மனுவில், “கும்பகோணம் மேலக்காவேரியில் உள்ள ஒரு மெட்ரிக் பள்ளியில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட பல மடங்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இதுகுறித்து மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளரிடம் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மேலும் பள்ளி சீருடைகளை ஒரு குறிப்பிட்ட துணிக்க்கடையில்தான் எடுக்க வேண்டும் என்று டோக்கன் கொடுக்கிறார்கள்.

எனவே ஆட்சியர் தலையிட்டு உரிய விசாரணை நடத்தி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அந்த மனுவில் கூறியிருந்தனர்.

அதேபோன்று, பட்டுக்கோட்டை அண்ணா குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்த மக்கள் 100-க்கும் மேற்பட்டவர்கள் திரளாக வந்து கோரிக்கை மனு ஒன்றை ஆட்சியரிடம் கொடுத்தனர்.

அதில், “பட்டுக்கோட்டை - அதிராம்பட்டினம் சாலையில் அண்ணா குடியிருப்புப் பகுதியில் 736 குடும்பங்கள் கடந்த 35 ஆண்டுகளாக வசித்து வருகிறோம்.

எங்கள் குடியிருப்புக்கு அருகே இரயில்வே தண்டவாளத்தை கடந்துச் செல்லும் பொதுப் பாதை ஒன்று உள்ளது. பட்டுக்கோட்டை மின்மயானத்திற்கு நகரில் உள்ள அனைத்து வார்டுகளிலும் இறந்தவர்களின் உடல்கள் இந்த வழியாகத்தான் எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்படுகிறது.

பள்ளிச் செல்லும் குழந்தைகள், மருத்துவமனைக்குச் செல்பவர்கள் இந்த வழியாகத்தான் சென்று வருகிறார்கள்.

ஏற்கனவே இருந்த மீட்டர்கேஜ் பாதையால் எந்த பிரச்சனையும் இல்லாமல் நாங்கள் சென்று வந்தோம். தற்போது அகல ரெயில்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த பணியின்போது எங்கள் பகுதிக்குச் செல்லும் சாலையில் சுரங்கப்பாதை அமைத்து மக்கள் இடையூறு இல்லாமல் சென்று வர நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.

தற்போது சுரங்கப்பாதை அமைக்காமல், இரயில்வே தண்டவாளப்பகுதியை உயர்த்தி வருகிறார்கள். இதனால் நாங்கள் குடியிருப்புப் பகுதியில் இருந்து வெளியே வருவதற்கு எந்தவித பாதையும் கிடையாது. இதனால் அங்கு வசிக்கும் மக்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாக கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே ஆட்சியர், அண்ணாகுடியிருப்பு பகுதியில் ஏற்கனவே பாதை இருந்த இடத்தில் சுரங்கப்பாதை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.