நெடுவாசல்…கதிராமங்கலம் அடுத்து மாதிரிமங்கலமா !! ஓஎன்ஜிசி குழாயில் உடைப்பு…போராட்டத்துக்கு தயாராகும் பொது மக்கள் !!!
நெடுவாசல்…கதிராமங்கலம் அடுத்து மாதிரிமங்கலமா !! ஓஎன்ஜிசி குழாயில் உடைப்பு…போராட்டத்துக்கு தயாராகும் பொது மக்கள் !!!
மயிலாடுதுறை அருகே உள்ள மாதிரிமங்கலம் எம்.ஜி.ஆர். நகரில் ஓ.என்.ஜி.சி. குழாயில் நேற்று திடீரென உடைப்பு ஏற்பட்டு கியாஸ் கசியத் தொடங்கியதால் அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் அச்சத்தில் வீடுகளை விட்டு வெளியே ஓடிவந்தனர். .
தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் கடந்த ஜூன் மாதம் 30-ந் தேதி ஓ.என்.ஜி.சி. எண்ணை குழாயில் உடைப்பு ஏற்பட்டு கியாஸ் கசிவு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினார்கள். போராட்டம் தொடர்பாக மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் உள்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர்.
அவர்கள் தற்போது நிபந்தனை ஜாமீனில் வந்துள்ளனர். ஆனாலும் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் கதிராமங்கலத்தை விட்டு வெளியேற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பொதுமக்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் மயிலாடுதுறை அருகே உள்ள மாதிரிமங்கலம் எம்.ஜி.ஆர். நகரில் ஓ.என்.ஜி.சி. குழாயில் நேற்று திடீரென உடைப்பு ஏற்பட்டு கியாஸ் கசிவு ஏற்பட்டது.
கியாஸ் கசிவால் அதிர்ச்சி அடைந்த பொது மக்கள் அவர்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்தனர். மேலும் மாதிரி மங்கலம் வழியாக செல்லும் ஓ.என்.ஜி.சி.குழாயை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.
ஏற்கனவே 3 முறை குழாயில் கசிவு ஏற்பட்ட நிலையில் தற்போது 4 ஆவது முறையாக உடைப்பு ஏற்ப்ட்டுள்ளதால், மாதிரிமங்கலம் கிராம மக்கள் போராட்டத்துக்கு தயாராகி வருகின்றனர்.
இதனால் மாதிரிமங்கலத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.