அரியலூரில் மஞ்சுவிரட்டு: காளைகளை அடக்கியவர்களுக்கு வெள்ளிப் பரிசு; காளைகளிடம் அடங்கியவர்களுக்கு வீரத்தழும்பு...
அரியலூர்
அரியலூரில் நடந்த மஞ்சுவிரட்டு போட்டியில் காளைகள் தட்டித் தூக்கியதில் 11 வீரர்கள் வீரத்தழும்பு அடைந்தனர்.
அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே உள்ள சேனாபதியில் நேற்று மஞ்சுவிரட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் பெரம்பலூர், அரியலூர், திருச்சி, தஞ்சை, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 400 காளைகள் கலந்து கொண்டன.
அதேபோல பெரம்பலூர், அரியலூர், திருச்சி, தஞ்சை, சேலம், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 150 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர்.
இந்தப் போட்டிக்காக ஊரின் வடக்கு தெருவில் வாடிவாசல் அமைக்கப்பட்டிருந்தது. இதில் இருந்து முதலில் கோவில் காளையும், அதனைத் தொடர்ந்து மற்ற காளைகளும் ஒவ்வொன்றாக அவிழ்த்துவிடப்பட்டன.
துள்ளி குதித்த காளைகளை மாடுபிடி வீரர்கள் சீறிப்பாய்ந்து அடக்கினர். இதில் சில காளைகளை வீரர்கள் அடக்கினர். சில காளைகள் வீரர்களை திணறடித்தன. சில காளைகள் மாடுபிடி வீரர்களை முட்டி தூக்கி வீசின.
இதில் காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரர்கள் கல்லக்குடியை சேர்ந்த மணி (21), லால்குடியை சேர்ந்த ராகுல் (21), கள்ளூரை சேர்ந்த கண்ணன் (20), பூதலூரை சேர்ந்த ராஜா (22) உள்பட 11 பேருக்கு வீரத்தழும்பு அடைந்தனர். அவர்களுக்கு அப்பகுதியில் இருந்த மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர்.
மஞ்சுவிரட்டு போட்டியில் காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் விழா குழுவினரால் வெள்ளி பாத்திரம், பிளாஸ்டிக் நாற்காலி, சைக்கிள், மின் விசிறி உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.