Asianet News TamilAsianet News Tamil

பெண் மருத்துவரின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து வெளியிட்டவர் கைது... மருத்துவர்கள் தொடர் போராட்டம்...

man arrested who put porno photo of female doctor Doctors continue to fight ...
man arrested who put porno photo of female doctor Doctors continue to fight ...
Author
First Published Jun 8, 2018, 8:10 AM IST


திருவண்ணாமலை
 
திருவண்ணாமலையில் மனைவிக்கு கருக்கலைப்பு செய்ய மறுத்த பெண் மருத்துவரின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டவரை காவலாளர்கள் கைது செய்தனர். அதன்பின்னும் மருத்துவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு, குழந்தை நல சிகிச்சை பிரிவு, மகப்பேறு பிரிவு என்று பல்வேறு பிரிவுகள் உள்ளன. 

இந்த மருத்துவமனையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்த மருத்துவமனைக்கு திருவண்ணாமலை மட்டுமின்றி அதனைச் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பொதுமக்களும் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். 

இந்த நிலையில், நேற்று முன்தினம் திருவண்ணாமலை அருகில் உள்ள நல்லவன்பாளையம் பகுதியைச் சேர்ந்த விஜயக்குமார் (30) என்பவர் தனது மனைவியுடன் திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வந்தார். 

அவர், திருவண்ணாமலையில் உள்ள ஒரு ஸ்டூடியோவில் பணியாற்றி வருகிறார். விஜயக்குமார் தனது மனைவியுடன் மகப்பேறு பிரிவுக்குச் சென்று, தனக்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகள் உள்ளது. தற்போது தனது மனைவி மூன்றாவது முறையாக கர்ப்பம் அடைந்துள்ளார். எனவே, எனது மனைவிக்கு கருக்கலைப்பு செய்ய வேண்டும்" என்று கூறியுள்ளார்.

அப்போது பணியில் இருந்த மருத்துவர் பவானி, "கருக்கலைப்பு செய்தபின் குடும்ப நல அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்" என்று கூறியுள்ளார். 

இதனையடுத்து விஜயக்குமார், "கருகலைப்பு மட்டும் செய்யுங்கள். குடும்ப நல அறுவை சிகிச்சை வேண்டாம்" என்று கூறியுள்ளார். 

அதெல்லாம் முடியாது கருகலைப்பு செய்ய வேண்டுமென்றால், குடும்ப நல அறுவை சிகிச்சையும் தான் செய்ய வேண்டும். அது சட்டப்படி குற்றம் என்றும் கூறியுள்ளார்.

இதனால் மருத்துவர் பவானியிடம், விஜயகுமார் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் விஜயக்குமார் மருத்துவரை செல்போனில் புகைப்படம் எடுத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பிவிட்டார். 

இதனையடுத்து விஜயக்குமார், மருத்துவரின் புகைப்படத்தை முகநூல், வாட்ஸ்-அப் போன்ற சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்து தரக்குறைவான மற்றும் ஆபாசமான கருத்துக்களை பதிவு செய்துள்ளார். மேலும், இதற்கு ஏராளமானோர் கமெண்டுகளும் பதிவிட்டுள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்த மருத்துவர் பவானி, முகநூலில் அதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இது தொடர்பாக பவானி திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். 

அதன்பேரில் காவலாளர்கள் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டனர். அதன்பின்னர் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் விஜயக்குமாரை காவலாளர்கள் கைது செய்தனர்.

இந்தச் சம்பவத்தைக் கண்டித்து நேற்று திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவர்கள், பயிற்சி மருத்துவர்கள் திடீரென வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

மேலும், அவர்கள் நேற்று காலை புறநோயாளிகள் பிரிவுக்கு செல்லாமல் புறக்கணித்தனர். காலை சுமார் 10 மணிவரை மருத்துவர்கள் வராததால் நோயாளிகள் மிகவும் அவதிப்பட்டனர். 

இதனால் அவதிப்பட்ட சிலர், புறநோயாளிகள் பிரிவு வளாகம் முன்பு வந்து நின்று மருத்துவர்களை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். இதனால் மருத்துவமனையில் பரபரப்பாக காணப்பட்டது.

பின்னர் 10 மணிக்கு மேல் மருத்துவமனை முதுநிலை மருத்துவர்கள் மூலம் புறநோயாளிகள் பிரிவில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மருத்துவர்கள் புறநோயாளிகள் பிரிவு முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். 

மேலும், மருத்துவமனையில் ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க காவலாளர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்களின் மருத்துவக் கல்லூரியின் டீன் நடராஜன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், பெண் மருத்துவரின் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்தவர் மருத்துவமனைக்கு வந்து, அனைத்து மருத்துவர்களின் முன்னிலையில் மன்னிப்பு கேட்க வேண்டும். 

மேலும், முகநூலில் ஆபாசமாகவும், தரக்குறைவாகவும் கருத்து தெரிவித்தவர்களில் சுமார் 10 பேரை உடனடியாக கைது செய்ய வேண்டும்" உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

பின்னர் டீன் கூறுகையில், "சமூக வலைதளத்தில் புகைப்படம் பதிவிட்டவர் கைது செய்யப்பட்டு உள்ளார். மற்றவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள். இந்த சம்பவம் குறித்து நான் முழு முயற்சி எடுத்து, கருத்து தெரிவித்தவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார். 

இருப்பினும் டாக்டர்கள், கருத்து தெரிவித்த 10 பேரை கைது செய்தால் தான் நாங்கள் பணிக்கு திரும்புவோம் என்றனர். இதனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.

இதனையடுத்து திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள், பயிற்சி மருத்துவர்கள் 200-க்கும் மேற்பட்டோர் அவசர சிகிச்சைப் பிரிவு முன்பு பந்தல் அமைத்து தரையில் அமர்ந்து தொடர்ந்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios