500, 1000 ரூபாய் நோட்டுகள் இனி செல்லாது. அதற்கு பதில் புதிய 2000 , மற்றும் 500 நோட்டுக்கள் கொண்டுவரப்படும் என பிரதமர் நரேந்திரமோடி நேற்று முன்தினம் அறிவித்தார்.
இந்த அறிவிப்பு அன்றைய தினம் நள்ளிரவே அமுலுக்கு வந்ததால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளானார்கள். பால், மளிகை பொருட்கள் உள்ளிட்டவை வாங்கவும், வெளியூர்களுக்கு பயணம் செய்யவும் முடியாமல் கடும் சிரமத்திற்கு ஆளானார்கள்.
மத்திய அரசின் திடீர் முடிவுக்கு சில அரசியல் கட்சிகள் எதிர்ப்பும் தெரிவித்தன. இந்த நிலையில் இந்திய தேசிய லீக் பொதுச்செயலாளர் சீனி அகமது, மதுரை ஐகோர்ட்டு கிளையில் ஒரு மனுவை தாக்கல் செய்தார்.

அதில் பிரதமர் மோடி, திடீரென 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்துள்ளார். இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர். எனவே இந்த அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும்.
மேலும் ஒரு நாளைக்கு புதிய 500, 2000 ரூபாய்களை ஏ.டி.எம்.களில் எடுக்க சில கட்டுப்பாடுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுவும் பொதுமக்களுக்கு சங்கடங்களை ஏற்படுத்தும். 2000 ரூபாய்தான் ஏ.டி.எம்.மில் தினம் எடுக்க முடியும் என்ற நிலை தொழில் செய்பவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும்.
இதனை தவிர்க்க பஸ் நிலையம், ரெயில் நிலையம், ஆஸ்பத்திரிகள் போன்ற இடங்களில் கூடுதல் கவுண்டர்கள் அமைத்து புதிய ரூபாய் நோட்டுகள் மக்களுக்கு தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என் கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், அரசின் அறிவிப்பானது பல நிபுணர்களின் கருத்துகளை கேட்டபிறகு தான் எடுக்கப்பட்டது. நாட்டின் முதன்மை குடிமகனான ஜனாதிபதியே இதனை வரவேற்றுள்ளார்.
நிதியமைச்சராக இருந்த அவருக்கு நிலைமை பற்றி அவருக்கு தெரியும். அரசின் நடவடிக்கை மூலம் இந்தியாவின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது. பயங்கரவாத செயல்களுக்கு பெரிய நோட்டுகள் தான் பயன்படுத்துகின்றனர்.

இப்போது எடுக்கப்பட்ட நடவடிக்கை நாட்டின் பாதுகாப்புக்கும் வளர்ச்சிக்கும் உகந்தது.கறுப்பு பணம் புழங்குவதால் பொருளாதாரத்திற்கு பாதிப்பு ஏற்படுகிறது. இந்த முடிவு மக்களுக்கு சிரமம் ஏற்பட்டாலும், பாராட்டக்கூடியது தான்.
நாட்டின் நலனுக்காக பல்வேறு தரப்பினரின் ஒத்துழைப்புடன் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில், சிரமங்கள் இருந்தாலும் நிரந்தர நலனை கொண்டு ஏற்க வேண்டும் எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்
