மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார் மு.க.அழகிரி; எதற்கு தெரியுமா?
மதுரை
மதுரை பெரியார் பேருந்து நிலைய ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் கடைகளுக்கு வாடகை உயர்த்தப்பட்டதை ரத்து செய்ய வேண்டும் என்று என்று மதுரை உயர்நீதிமன்றத்தில் மு.க.அழகிரி வழக்கு தொடர்ந்துள்ளார்.
முன்னாள் மத்திய மந்திரி மு.க.அழகிரி, மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், "மதுரை பெரியார் பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள ஷாப்பிங் காம்ப்ளக்சில் மாநகராட்சிக்குச் சொந்தமான மூன்று கடைகளை குத்தகைக்கு எடுத்து மருத்துவ ஆய்வகம் நடத்தி வருகிறேன்.
தற்போது மாத வாடகையாக இரண்டு கடைகளுக்கு ரூ.9 ஆயிரத்து 969-யும், ஒரு கடைக்கு ரூ.10 ஆயிரத்து 565-யும் செலுத்துகிறேன்.
இந்த நிலையில் மூன்று கடைகளின் வாடகையை ரூ.13 ஆயிரத்து 358 ஆக உயர்த்தி உள்ளதாக மதுரை மாநகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
இந்த வாடகையை செலுத்த தவறினால் கடைகள் பொது ஏலத்தில் விடப்படும் என்றும், 2007-ல் மாநகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வினியோகத்துறை பிறப்பித்த அரசாணை அடிப்படையில் மேற்கண்ட கடைகளின் வாடகை உயர்த்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுப் பணித்துறையின் மதிப்பீடு, தற்போதைய மதிப்பு, கட்டிட மதிப்பு மற்றும் நிலத்தின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையிலேயே வாடகை உயர்த்தப்பட வேண்டும். ஆனால், தற்போது வாடகை உயர்த்தப்பட்டுள்ள இந்த கடைகளுக்கு மேற்கண்ட மதிப்பீடுகள் எதுவும் முறையாக செய்யப்படவில்லை.
மாநகராட்சியின் இந்த முடிவு சட்டவிரோதமானது. எனவே, மாநகராட்சி அனுப்பிய நோட்டீசுக்கு தடை விதிப்பதுடன், இந்த நோட்டீசை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்" என்று அந்த மனுவில் கூறியிருந்தார்.
இதேபோல ஷாப்பிங் காம்ப்ளக்சில் கடை நடத்தி வரும் சிலரும், மதுரை ஜான்சிராணி பூங்கா அருகில் உள்ள மாநகராட்சி வணிக வளாகத்தில் கடை நடத்தி வரும் சிலர் உள்பட 13 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த வழக்கு நீதிபதி பாரதிதாசன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பு வக்கீல் ஜானகிராமுலு ஆஜராகி, “மனுதாரர்களின் கடைகளுக்கு வாடகை உயர்த்துவது தொடர்பாக மனுதாரர்களின் கருத்துகளை கேட்டு முடிவு செய்து இருக்கலாம்” என்றார்.
இதற்கு மாநகராட்சி தரப்பில் ஆஜரான வக்கீல் முகமது மொய்தீன், “கடைகளுக்கு தற்போதைய மதிப்பீட்டின் அடிப்படையில் தான் வாடகை உயர்த்தப்பட்டு உள்ளது” என்றார்.
இதனையடுத்து இந்த வழக்கு குறித்து மாநகராட்சிக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் இந்த வழக்கை வருகிற 21-ஆம் தேதி ஒத்திவைத்தார்.