madras high court order to dissolve sagayam team
கிரானைட் முறைகேடு தொடர்பாக அமைக்கப்பட்ட சகாயம் குழுவை வரும் 31 ஆம் தேதிக்குள் கலைக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கிரானைட் முறைகேடு குறித்து விசாரிக்க ஐ.ஏ.எஸ் குழு அமைக்க வேண்டும் என சென்னையை சேர்ந்த, டிராபிக்ராமசாமி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதையடுத்து கிரானைட் குவாரி முறைகேடு குறித்து விசாரணை நடத்த, ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயத்தை,ஆணையராக, உயர் நீதிமன்றம் நியமித்தது.
இதைதொடர்ந்து சகாயமும் ஆய்வு செய்து, அறிக்கை தாக்கல் செய்தார். அதில், அரசுக்கு 1 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் இழப்பு ஏற்பட்டிருப்பதாக கூறியுள்ளார்.
இதனிடையே சகாயம் குழுவில் இடம் பெற்றிருந்த, ஓய்வு பெற்ற தாசில்தார் மீனாட்சிசுந்தரத்துக்கு, எட்டு மாத சம்பள தொகையை வழங்கும்படி, உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் அடங்கிய குழு முன்பு விசாரணைக்கு வந்தது.
அரசு தரப்பில் இந்த குழுவுக்காக, அரசு சார்பில், 58 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
நீதிமன்றத்தில் இருந்த, கிரானைட் நிறுவனங்களின் கூட்டமைப்புக்கு ஆஜராகும் மூத்த வழக்கறிஞர் வில்சன், சகாயம் அறிக்கையில் பல முரண்பாடுகள் உள்ளதாக தெரிவித்தார்.அதற்கு, சகாயம் குழு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார்.
இந்நிலையில், சகாயம் குழுவை வரும் 31 ஆம் தேதிக்குள் கலைக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
