லாரி சக்கரத்தில் சிக்கி ஸ்கூட்டியோடு இழுத்துச் செல்லப்பட்ட பெண்; உடல் நசுங்கி பலி; ஓட்டுநர் எஸ்கேப்...
வேலூர்
வேலூரில் லாரி மோதியதில் ஸ்கூட்டியில் சென்ற பெண் சக்கரத்தில் சிக்கி சாலையில் இழுத்துச் செல்லப்பட்டு உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
வேலூர் மாவட்டம், சோளிங்கரை சேர்ந்தவர் ரவி. இவருடைய மனைவி உஷா (37). ரவி ஒரு வருடத்திற்கு முன்பு இறந்துவிட்டதால் உஷா திருவலத்தில் வசித்து வந்தார்.
இந்த நிலையில் அவர் நேற்று வேலூருக்கு வந்துள்ளார். மாலையில் வேலூரில் அண்ணாசாலையில் உள்ள முஸ்லிம் மேல்நிலை பள்ளி அருகே உஷா ஸ்கூட்டியில் சென்றுள்ளார்.
அப்போது பின்னால் வந்த லாரி உஷா ஓட்டிச்சென்ற ஸ்கூட்டி மீது இடித்துள்ளது. இதில் நிலைதடுமாறிய உஷா கீழே விழுந்தார். அப்போது லாரியின் பின்சக்கரத்தில் சிக்கிக் கொண்டார். இதனால் சுமார் 25 அடி தூரத்திற்கு இழுதத்து செல்லப்பட்டார் உஷா.
இதனை பார்த்த பொதுமக்கள் அலறினர். கூட்டத்தின் சத்தத்தைக் கேட்டு உடனே ஓட்டுநர் லாரியை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். சக்கரத்தில் சிக்கிய உஷா உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.
இந்த விபத்து காரணமாக அண்ணாசாலையில் போக்குவரத்து தடைபட்டு நெரிசல் ஏற்பட்டது. இதுபற்றிய தகவல் அறிந்ததும் வேலூர் தெற்கு காவல் உதவி ஆய்வாளர் செல்வராஜ் மற்றும் காவலாளர்கள் சம்பவ இடத்திற்கு சென்று போக்குவரத்தை வேறு பாதையில் மாற்றிவிட்டனர்.
பின்னர் உஷாவின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து காவலாளார்கள் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.