கோரிக்கைகள் நிறைவேறியதால் போராட்டம் வாபஸ்... லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவிப்பு
வேகக்கட்டுப்பாட்டு கருவி பொறுத்தப்படுவதை கண்டித்தும், வாகனகளுக்கான காப்பீடு தொகை அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தென் இந்திய லாரிகள் சம்மேளனம் போராட்டம் நடத்தி வந்தது.
போராட்டத்தை கைவிடுமாறு சம்மேளனத்திடம் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முதல் கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர். அது தோல்வி அடைந்ததையடுத்து கடந்த ஐந்து நாட்களாக போராட்டம் தொடர்ந்தது.
இந்நிலையில் பெட்ரோல், டீசல், கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்களும் இன்று முதல் போராட்டத்தில் குதித்தனர். இதனால் அத்யாவசிய பொருள்களின் விலை கிடுகிடுவென்று உயர்ந்ததுடன் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாய சூழ்நிலை உருவானது.
இதையடுத்து போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் லாரி உரிமையாளர் சம்மேளனத்தை அழைத்து இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது வாகனங்களின் காப்பீடு தொகைக்கான பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்றும் இதர கோரிக்கைகள் படிப்படியாக சரிசெய்யப்படும் என்று தெரிவித்தார்.
தங்களது கோரிக்கைகளை அரசு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தை தொடர்ந்து போராட்டத்தை வாபஸ் பெறுவதாக லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள லாரிகள் உடனடியாக இயக்கப்படும் என்று தெரிவித்தனர்.