நம்ப வைத்து கழுத்தை அறுத்துவிட்டார் ஓபிஎஸ்….பொங்கிய லட்சுமிபுரம் பொது மக்கள்…இன்று தொடங்குகிறது போராட்டம்..
நம்ப வைத்து கழுத்தை அறுத்துவிட்டார் ஓபிஎஸ்….பொங்கிய லட்சுமிபுரம் பொது மக்கள்…இன்று தொடங்குகிறது போராட்டம்..
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே குடிநீர் ஆதாரமாக உள்ள கிணற்றை, வேறு நபருக்கு விற்று, கிராம மக்களுக்கு துரோகம் செய்த ஓ. பன்னீர்செல்வத்தைக் கண்டித்து, இன்று லட்சுமிபுரம் கிராம மக்கள் போராட்டத்தை தொடங்குகின்றனர்.
தேனி மாவட்டம், பெரியகுளத்தை அடுத்த லட்சுமிபுரத்தில் ஓபிஎஸ்க்கு சொந்தமான கிணறு உள்ளது. இந்தக் கிணறு தோண்டப்பட்டதால், அருகில் உள்ள லட்சுமிபுரத்துக்கு குடிநீர் ஆதாரம் பாதிக்கப்பட்டது.
இதனையடுத்து, அந்த கிராமத்தினர் பல்வேறுகட்ட போராட்டங்களை நடத்தினர். கடந்த 13-ம் தேதி ஊர் பொதுமக்களிடம் நடத்திய பேச்சுவார்த்தையில், தன் மனைவி பெயரில் இருந்த 3 ஏக்கர் 31 சென்ட் நிலத்தில் இருந்த கிணற்றை, கிராமத்தினருக்கு விலைக்கு தருவதாக கூறிய ஓபிஎஸ் பேச்சுவார்த்தைக்கு முந்தைய நாளான 12-ம் தேதியே சுப்புராஜ் என்பவருக்கு விற்று இருப்பது கிராம மக்களுக்கு தெரிய வந்தது.
இதனால் ஆத்திரமடைந்துள்ள கிராம பொதுமக்கள், கிராமத்தினருக்கு கிணறு கிடைக்கும்வரை, இன்று முதல், ஒவ்வொரு நாளும் பல்வேறு விதமான போராட்டங்களில் ஈடுபடப் போவதாகத் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து இன்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.