lady was killed by lorry while waiting for crossing the road

தருமபுரி

தருமபுரி - சேலம் சாலையில் அடுத்தடுத்து லாரிகள் மோதிய விபத்தில், சாலையை கடக்க நின்ற பெண் பரிதாபமாக பலியானார்.

குஜராத்தில் இருந்து தேனி மாவட்டத்திற்கு கொத்தமல்லி பாரம் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று தருமபுரி - சேலம் சாலையில் வந்துக் கொண்டிருந்தது. இதனை நாமக்கல்லை சேர்ந்த ஓட்டுநர் செல்வராஜ் (47) என்பவர் ஓட்டி வந்தார்.

அதேபோல, ஒடிசாவில் இருந்து கொச்சிக்கு பிளாஸ்டிக் குழாய்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்றது. அந்த லாரியை சேலம் ஜலகண்ட புரத்தை சேர்ந்த கார்த்தி (32) என்பவர் ஓட்டிச் சென்றார்.

தருமபுரி - சேலம் நான்கு வழிச்சாலையில் தொப்பூர் பகுதியில் சென்றபோது, பிளாஸ்டிக் பாரம் ஏற்றிய லாரி, முன்னால் சென்றுக் கொண்டிருந்த கொத்தமல்லி பாரம் ஏற்றிய லாரியின் பின்புறத்தில் வேகமாக மோதியது. இதில் கட்டுப்பாட்டை இழந்த அந்த லாரி, சாலையின் தடுப்பில் மோதியது.

அப்போது, அங்கு சாலையை கடக்க நின்றிருந்த பெண் மீது மோதிவிட்டு, சாலையில் எதிர் பகுதிக்குள் புகுந்தது. அங்கு நின்றிருந்த டேங்கர் லாரி மீதும் மோதிய பின்னரே அந்த லாரி நின்றது.

இதேபோல, பிளாஸ்டிக் பாரம் ஏற்றி வந்த லாரி சாலையோரம் நின்றிருந்த கன்டெய்னர் லாரி மீது மோதியது. இந்த விபத்தில் நான்கு லாரிகள் சேதமடைந்தன. மேலும், லாரி மோதியதில் படுகாயம் அடைந்த பெண்ணை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனை கொண்டு செல்லும், வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் லாரி டிரைவர்கள் செல்வராஜ், கார்த்தி ஆகியோர் லேசான காயத்துடன் தப்பினர்.

இந்த விபத்தில் பலியான பெண் குறித்து காவலாளர்கள் நடத்திய விசாரணையில், அவர் தொப்பூர் பகுதியை சேர்ந்த தீர்த்தகிரி என்பவரின் மனைவி பழனியம்மாள் (41) என்பதும், கூலி தொழிலாளியான அவர் பணி முடிந்து வீட்டுக்கு திரும்புவதற்காக சாலையின் நடுவே உள்ள தடுப்பில் நின்றிருந்த போது லாரி மோதியதும் தெரியவந்தது.

லாரிகள் அடுத்தடுத்து மோதிய விபத்து காரணமாக தருமபுரி - சேலம் சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து தொப்பூர் காவலாளர்கள் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.