கோட்டை மாரியம்மன் கோவிலில் நகையை கோட்டைவிடாமல் இருக்க சேஃப்டி பின் வழங்கிய காவல்துறை…
திண்டுக்கல் மாவட்டம் கோட்டை மாரியம்மன் கோவிலில் பூக்குழி இறங்க 2500-க்கும் மேற்பட்ட அடியார்கள் கூடினர். அவர்களில் நகைகள் அணிந்து வந்தவர்களுக்கு காவல்துறையினர் சேஃப்டி பின் வழங்கி பாதுகாப்பு அளித்தனர்.
கி.பி.1788-1790-ம் ஆண்டுகளில் திண்டுக்கல் மலைக்கோட்டையில் இருந்து மன்னர் திப்புசுல்தான் ஆண்டு வந்தார். அப்போது திப்புசுல்தானின் படை வீரர்கள் மலைக்கோட்டையின் கிழக்கு பக்கத்தில் இருந்த கவாத்து என்னும் போர் பயிற்சி செய்யும் மைதானத்தில் மாரியம்மனுக்கு ஒரு சிறு பலிபீடமும், மூல சிலையும் அமைத்து வழிபட்டனர்.
அதுவே அவர்களுக்கு காவல் தெய்வமாக இருந்துள்ளது. அவ்வாறு காவல் தெய்வமாக இருந்து அருளிக்கத் தொடங்கிய மாரியம்மன் இன்று வரை அடியார்களுக்கு அருள் செய்து வருகிறாள்.
மலைக்கோட்டைக்கு அருகில் கோவில் அமையப்பெற்றதாலும் இந்த அம்மன் ‘கோட்டை மாரியம்மன்’ என்று அழைக்கப்படுகிறாள். அப்பெயரே காலப்போக்கில் நிலைத்து விட்டது.
திண்டுக்கல் மாவட்டம் கோட்டை மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் மாசிப் பெருந்திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்தத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூக்குழி இறங்குதல் விழா இன்று காலை 7.30 மணி முதல் நடைபெற்று வருகிறது.
இந்த விழாவில் திண்டுக்கல் மதுரை உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 2500-க்கும் மேற்பட்ட அடியார்கள் பூக்குழி இறங்கி அம்மனை வழிபட்டனர்.
ஒவ்வொரு ஆண்டும், இந்த விழாவை காண ஏராளமானோர் இங்கு கூடுவது வழக்கம். இந்தமுறையும் கூட்டம் குறையாமல் அடியார்கள், அம்மனை தரிசித்தனர்.
ஏராளமான அடியார்கள் கூடும் இடத்தில் பாதுகாப்பிற்காக காவலாளர்களும் குவிக்கப்பட்டுள்ளனர். எந்தவித அசாம்பாவிதங்களும் நடைபெறாமல் காவல்துறையினர் பார்த்து வருகின்றனர். அதன் ஒருபகுதியாக, திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவிலுக்கு நகைகள் அணிந்து வரும் பெண்களுக்கு காவல்துறை பாதுகாப்பு ஊசிகள் (SAFETY PIN) வழங்கினர்.
இன்று இரவு நடைபெற இருக்கும் அம்மன் வீதி உலா மிகவும் சிறப்பு வாய்ந்தது.