கேரள மருத்துவமனைகளில் இருந்து சேகரிக்‍கப்பட்ட மருத்துவக்‍ கழிவுகளை கோவை அருகே கொட்ட வந்த லாரிகள் சிறைப்பிடிக்‍கப்பட்டன. இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

கேரளாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து மருத்துவக்‍ கழிவுகள், ஆயில் டப்பாக்‍கள், கட்டட இடிபாடுகள், பீங்கான் பாகங்கள் உள்ளிட்ட பொருட்கள் தமிழக எல்லைப் பகுதியான கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கொட்டப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கோவை மாவட்டம் எட்டிமடை அருகே தோட்டம் ஒன்றில் கொட்டப்பட்டிருந்த மருத்துவக்‍ கழிவுகளால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசியது. இதனால், அதிர்ச்சியடைந்த பொதுமக்‍கள், அப்பகுதிக்‍குச் சென்று பார்த்தபோது, அங்கு கழிவுப் பொருட்கள் மலைபோல கொட்டி வைக்‍கப்பட்டிருந்ததைக்‍ கண்டு, திகைப்படைந்தனர்.

மேலும், ஏராளமான கழிவுப் பொருட்களை கொட்ட லாரிகள் தயார் நிலையில் இருந்ததையும் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்‍கள், 23 லாரிகளை சிறைப்பிடித்தனர்.

இதுதொடர்பாக, காவல் நிலையத்திற்கும், அதிகாரிகளுக்‍கும் புகார் அளிக்‍கப்பட்டதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் தோட்டத்தின் உரிமையாளர் செல்லப்பன், கழிவுப் பொருட்களை விற்பனை செய்யும் முகமது இலியாஸ் ஆகியோர் மீது வழக்‍குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். லாரிகள் சிறைப்பிடிக்‍கப்பட்டதையடுத்து, அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.