kausalya happy about sankar murder case judgement

சாதி வெறியர்கள் இனிமேல் கௌரவ கொலை செய்வதற்கு பயப்படும் வகையில், சங்கர் ஆணவ கொலை வழக்கில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிற்கு வரவேற்பும் மகிழ்ச்சியும் தெரிவித்துள்ளார் கௌசல்யா.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையை சேர்ந்த சங்கர் என்ற பொறியியல் பட்டதாரியும் பழனியை சேர்ந்த கௌசல்யாவும் காதலித்து சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்டனர். 

இதையடுத்து கடந்த ஆண்டு மார்ச் 13-ம் தேதி உடுமலையில் பட்டப்பகலில் பொதுமக்களின் கண்முன்னே சங்கர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொடூர கொலை காட்சிகள் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது.

பட்டப்பகலில் பொதுமக்களின் கண்முன்னே சங்கர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக கௌசல்யாவின் தந்தை சின்னசாமி, தாய் அன்னலட்சுமி, தாய்மாமன் பாண்டித்துரை மற்றும் கொலை செய்த மணிகண்டன், ஜெகதீசன் உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கு திருப்பூர் வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நடந்துவந்தது. இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட 11 பேரின் மீதும் 1500 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நடந்துவந்த இந்த வழக்கில், கௌசல்யாவின் தந்தை மற்றும் கூலிப்படையை சேர்ந்த ஜெகதீசன், மணிகண்டன், செல்வகுமார், கலை தமிழ்வாணன், மதன் ஆகிய 6 பேருக்கு இரட்டை தூக்கு தண்டனையும் ஸ்டீபன் தன்ராஜுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் மணிகண்டன் என்ற மற்றொருவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

தீர்ப்பிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கௌசல்யா, சங்கர் சிந்திய ரத்தத்திற்கு நீதி கிடைத்து விட்டது. சங்கர் கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளின் தண்டனை எந்த வகையிலும் குறைக்கப்பட்டுவிடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு இரட்டை தூக்கு, இரட்டை ஆயுள் தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த தீர்ப்பு சங்கர் கொலை வழக்கிற்கான தீர்ப்பு மட்டுமல்ல. சாதி வெறியர்கள் இனிமேல் கௌரவ கொலை செய்ய பயப்படுகிற வகையில், இந்த தீர்ப்பு அமைந்துள்ளது. இந்த வழக்கில் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பினால், நீதித்துறையின் மீதான நம்பிக்கை அதிகரித்துள்ளது.

அதே நேரத்தில் அன்னலட்சுமி, பாண்டித்துரை, பிரசன்ன குமார் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள். ஆனால் உயர்நீதிமன்றத்திற்கு சென்று முறையிட்டு அவர்களுக்கும் உரிய தண்டனை பெற்றுத்தரும் வரை எனது போராட்டம் ஓயாது.

அதேநேரத்தில் தண்டனை பெற்றவர்கள், மேல்முறையீடு செய்தால், அதற்கு எதிராக மேல்முறையீடு செய்து அவர்களின் தண்டனையை உறுதி செய்யும் எனது சட்டப் போராட்டம் தொடரும் என கௌசல்யா தெரிவித்தார்.

மேலும் சங்கர் கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி வந்த அரசியல் கட்சியினருக்கும், சமூக செயற்பாட்டாளர்களுக்கும், மனித உரிமை செயற்பாட்டாளர்களுக்கும் ஊடகங்களுக்கும் நன்றி தெரிவித்தார் கௌசல்யா.