எங்களுக்கு காழ்ப்புணர்ச்சிலா இல்ல....தமிழுக்காகவும் தமிழ்நாட்டிற்காகவும் போராடினார் கலைஞர்: மக்களவை துணை சபாநாயகர் அதிரடி பேச்சு!
தமிழுக்காகவும் தமிழ்நாட்டிற்காகவும் பாடுபட்ட கருணாநிதி நலமடைந்து வருவது மகிழ்ச்சி என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார். கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை கட்டுமான பணிகளை மக்களவை துணை சபாநாயகர் தம்பித்துரை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், ஆட்சியர் அன்பழகன் ஆகியோர் இன்று காலை பார்வையிட்டு ஆய்வு நடத்தினர்.
பின்னர் தம்பிதுரை செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் அடிக்கல் நாட்டப்பட்ட அரசு மருத்துவ கல்லூரி கட்டுமான பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. அடுத்த கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றார். மருத்துவமனையும் செயல்படும் என தெரிவித்தார்.
உள்ளாட்சி தேர்தலை கண்டு அதிமுகவுக்கு பயம் இல்லை. ஜெயலலிதா இருந்த போதே வேட்பு மனுக்கள் பெறப்பட்டது. திமுகதான் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இடைக்கால தடை வாங்கியது என்றார். பெரியார், அண்ணா வழியில் வந்த திமுக தலைவர் கருணாநிதி மீது எங்களுக்கு அரசியல் காழ்ப்புணர்ச்சி கிடையாது. கருத்து வேறுபாடுகள் இருக்கலாம் என்றார். தமிழுக்காகவும் தமிழ்நாட்டிற்காகவும் பாடுபட்ட கருணாநிதி நலமடைந்து வருவது மகிழ்ச்சி அளிப்பதாக தம்பிதுரை பேட்டியளித்துள்ளார்.