என்னது கருணாநிதி கருத்து தெரிவித்தாரா! சைக்கிள் கேப்பில் சாட்டிலைட் ஓட்டியதா தி.மு.க.?
தி.மு.க. முதல் முறையாக தமிழக கோட்டையில் அரியாசனத்தில் அமர்ந்ததை விட அதிகபட்ச கொண்டாட்டத்தில் அக்கட்சி இன்று இருக்கிறது. காரணம்? ஸ்பெக்டரம் வழக்கிலிருந்து ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட அனைவரும் விடுதலையாகி இருப்பதுதான். இந்த தீர்ப்பை திகட்ட திகட்ட கொண்டாடி வருகிறது தி.மு.க.
தீர்ப்பு வெளியானதும் ஸ்டாலின் தன் பங்களா வாசலில் இருந்த மீடியா நபர்களுக்கு இனிப்பு வழங்கிவிட்டு குதூகலமாக பேட்டியும் வழங்கினார்.
இந்நிலையில் கோபாலபுர இல்லத்தில் இருந்த கருணாநிதியிடம் இந்த தீர்ப்பு சேதி சொல்லப்பட்டது. சமீபகாலமாக உடல் மற்றும் மன நிலையில் லேசாக தேறியிருக்கும் கருணாநிதியும் அதை புரிந்து கொண்டு லேசாக புன்னகைத்திருக்கிறார்.
இந்நிலையில் இந்த தீர்ப்பு குறித்து கருணாநிதி கருத்து தெரிவித்ததாக ஒரு செய்தியை கொளுத்திப் போட்டிருக்கிறது தி.மு.க. தரப்பு. அதாவது ‘அநீதி வீழும், அறம் வெல்லும்! என்று தலைவர் கலைஞர் அவர்கள் எழுதி கருத்து தெரிவித்துள்ளார்.’ என்று கூறியுள்ளார்கள்.
எழுத்துப்பூர்வமாக கருத்தெல்லாம் தெரிவிக்கும் நிலையில் கருணாநிதி இல்லை எனும் நிலைதான் நேற்று வரை தமிழகம் அறிந்திருந்தது. கோபாலபுர வட்டாரம் அவரை காட்டியதும் அந்த அளவில்தான். இந்நிலையில் இன்று அழகு தமிழில் அவர் கருத்தே தெரிவித்திருப்பதாக சொல்லியிருப்பது அரசியல் பார்வையாளர்களை அதிர வைத்திருக்கிறது.
இதுபற்றி ‘தாங்க முடியாத சந்தோஷத்தில் இருக்கீங்க சரி. அதுக்காக கருணாநிதி எழுத்தில் கருத்து தெரிவித்ததா சொல்றதெல்லாம் ரொம்ப ஓவர் இல்லையா? தன் சார்பாக எந்த கருத்து, அறிக்கை வெளியானாலும் அதை முறையாக வாசித்து பார்த்துவிட்டு திருத்தங்களை சொல்லி பின் வெளியிடுவதே அவரது வழக்கம். ஆனால் உடல் நலம் இப்படியிருக்கும் நிலையில் அவர் கருத்து சொன்னதாக கூறியது உண்மையா? இல்லே அவரோட கையப்பிடிச்சு யாரோ எழுத வெச்சு இப்படியொரு அறிக்கையை வெளியிட்டிருக்கீங்களா? முத்தமிழறிஞருக்கே கையப்பிடிச்சு தமிழ் எழுத வெச்சீங்களா பாஸ்?
இல்லே நீங்கதான் சைக்கிள் கேப்ல சாட்டிலைட் ஓட்டிட்டீங்களா? உள்ளதை சொல்லுங்க பாஸ்” என்று கருத்தாக கலாய்க்கிறார்கள்.
தீர்ப்பின் வெற்றிக் களிப்பில் தி.மு.க.தான் கருணாநிதி பெயரை சொல்லி இப்படி அடித்துவிட்டிருக்கிறதா! உண்மையை சொல்வது உத்தமம்.