குற்றம் செய்த மாணவர்களுக்கு தண்டனைக்கு பதில் 100 திருக்குறளை படித்து மனப்பாடம் செய்ய வேண்டும் என்று நீதிபதி வித்யாசமாக உத்தரவிட்டுள்ளது அனைவரையும் பாராட்ட வைத்துள்ளது.

மேட்டுப்பாளையம் உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் சுரேஷ்குமார் தான் அவர். இந்த தீர்ப்பின் மூலம் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார்.

காரமடை காவல் நிலையத்தில் மூன்று கல்லூரி மாணவர்கள் மீது குற்றச்சம்பவத்தில் வழக்கு பதியப்படுகிறது. அவர்களை விசாரித்த நடுவர் மாணவர்கள் என்பதால் அவர்களின் எதிர்கால நலன் கருதி உடனடியாக பிணை வழங்கிய நடுவர், அந்த மாணவர்களுக்கு வழங்கிய தண்டனையை அனைவரும் ஆரவாரமாக வரவேற்றனர். 

மூன்று மாணவர்களும் தினமும் மேட்டுப்பாளையம் அரசு ஆண்கள் பள்ளி தமிழாசிரியரிடம் 10 திருக்குறள் ஒப்புவிக்க வேண்டும் என்பதே அந்த தண்டனை.

பத்து நாட்களுக்கு 10 குறள் வீதம் மொத்தம் 100 திருக்குறள் ஒப்புவித்த பின்பு தலைமை ஆசிரியர் நீதிமன்றத்தில் மாணவர்களுக்கு சான்றிதழ் அளிக்க வேண்டும்.
மாணவர்களுக்கு உடனடியாக பிணையும் வழங்கி, தண்டனையிலும் தமிழை வளர்க்கும் நீதிபதி சுரேஷ்குமாருக்கு பாராட்டுகள் குவிகிறது.