தற்போது, முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் அசுர முன்னேற்றம் ஏற்பட்டு, அவர் வெகுநேரம் நாற்காலியில் உட்கார்ந்து இயல்பாகவே சுவாசிக்கிறார் என, மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முதலமைச்சர் ஜெயலலிதா, கடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
அவருக்கு லண்டன் டாக்டர் ரிச்சர்ட் ஜான்பீலே, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள், சிங்கப்பூர் பிசியோதெரபி பெண் நிபுணர்கள் இடைவிடாமல் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதையொட்டி அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் அடைந்து வருவதாக டாக்டர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையில் முதலமைச்சர் ஜெயலலிதா, பூரண குணமடைய வேண்டி, அதிமுக அமைச்சர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் என தினமும் லட்சக்கணக்கானோர் தமிழகம் முழுவதும் உள்ள பல கோயில்களில் யாகம், பூஜை, தேர் இழுத்தல், அலகு குத்துதல் உள்பட பல்வேறு பிரார்த்தனைகளை செய்து வருகின்றனர்.
மேலும் முதலமைச்சர், பல்வேறு கட்சி தலைவர்கள், மத்திய அமைச்சர்கள், சினிமா நட்சத்திரங்களும், அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்று, அவரது உடல்குறித்து விசாரித்து செல்கின்றனர்.
முதலமைச்சர் ஜெயலலிதா தொடர்ந்து 50வது நாளாக நேற்று சிகிச்சை பெற்றார். அவர் நீண்டநேரம் நாற்காலியில் உட்கார்ந்து, ‘டிரக்கியாஸ்டமி’ சிகிச்சை முறையில் மேற்கொள்ளப்படும் செயற்கை சுவாச குழாய் இல்லாமல் இயல்பாகவே சுவாசித்ததாக, டாக்டர்கள் தெரிவித்தனர்.
