முதலமைச்சர் ஜெயலலிதா, அடுத்த வாரம் புதன்கிழமை மருத்துவமனையில் இருந்து வீடு திரும்ப உள்ளதாக அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன.

முதலமைச்சர் ஜெயலலிதா, கடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

அவருக்கு லண்டன் டாக்டர் ரிச்சர்ட் ஜான்பீலே, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள், சிங்கப்பூர் பிசியோதெரபி பெண் நிபுணர்கள் இடைவிடாமல் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதையொட்டி அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் அடைந்து வருவதாக டாக்டர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையில் முதலமைச்சர் ஜெயலலிதா, பூரண குணமடைய வேண்டி, அதிமுக அமைச்சர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் என தினமும் லட்சக்கணக்கானோர் தமிழகம் முழுவதும் உள்ள பல கோயில்களில் யாகம், பூஜை, தேர் இழுத்தல், அலகு குத்துதல் உள்பட பல்வேறு பிரார்த்தனைகளை செய்து வருகின்றனர்.

மேலும் முதலமைச்சர், பல்வேறு கட்சி தலைவர்கள், மத்திய அமைச்சர்கள், சினிமா நட்சத்திரங்களும், அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்று, அவரது உடல்குறித்து விசாரித்து செல்கின்றனர்.

முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நேற்று 50வது நாளாக சிங்கப்பூர் பிசியோதெரபி சிகிச்சை நிபுணர் ஜூடி மட்டும் உடற்பயிற்சி அளித்தார்.

இதற்கிடையில், லண்டன் திரும்பி சென்ற டாக்டர் ரிச்சர்டு ஜான் பீலேவை, அங்குள்ள தமிழர்கள் அவரை சந்தித்து பேசினார்கள். அப்போது, முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை உடல்நிலை குறித்தும், தற்போதைய நிலை குறித்தும் கேட்டறிந்தனர்.

அப்போது, முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நாங்கள் கொடுத்த மருத்துவம் சரியான பாதையில் சென்றது. அதை அவருடைய உடல் ஏற்றுக்கொண்டது. அவர் தற்போது பூரண நலம் பெற்றுவிட்டார். அடுத்த வாரம் அவர், வீடு திரும்புவார். அதற்கான நேரத்தை அவரே அவரே முடிவு செய்வார் என கூறியுள்ளார்.

மேலும், நான் உலகின் பல தலைவர்களுக்கு சிகிச்சை அளித்துள்ளேன். ஆனால், முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்ததில் நான் எனக்கு தனி பெருமை உண்டு. தமிழக மக்கள் அவர் மீது வைத்துள்ள அன்பை கண்டு நான் நெகிழ்ச்சி அடைந்தேன். தீபாவளி பண்டிகையை தமிழகத்தில் தான் கொண்டாடினேன்.

இந்நிலையில் முதலமைச்சர் ஜெயலலிதா அடுத்த வாரம் வீடு திரும்புவது குறித்து அதிமுக மூத்த நிர்வாகிகளிடம் கேட்டபோது, “இன்று முதல் 3 நாட்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. இதனால், திங்கட்கிழமை வரை, ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெறுவார். அடுத்த நாள் செவ்வாய்க்கிழமை என்பதால், பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பார்கள். அதையொட்டி புதன்கிழமை முதல்வர் ஜெயலலிதா வீடு திரும்புவார் என எதிர்பார்க்கிறோம் என்றனர்.