முதலமைச்சர் ஜெயலலிதா, நேற்று 3 மணிநேரம் உடற்பயிற்சி மேற்கொண்டார் என பிசியோதெரபி நிபுணர்கள் கூறினர்.

முதலமைச்சர் ஜெயலலிதா, கடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

அவருக்கு லண்டன் டாக்டர் ரிச்சர்ட் ஜான்பீலே, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள், சிங்கப்பூர் பிசியோதெரபி பெண் நிபுணர்கள் இடைவிடாமல் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதையொட்டி அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் அடைந்து வருவதாக டாக்டர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையில் முதலமைச்சர் ஜெயலலிதா, பூரண குணமடைய வேண்டி, அதிமுக அமைச்சர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் என தினமும் லட்சக்கணக்கானோர் தமிழகம் முழுவதும் உள்ள பல கோயில்களில் யாகம், பூஜை, தேர் இழுத்தல், அலகு குத்துதல் உள்பட பல்வேறு பிரார்த்தனைகளை செய்து வருகின்றனர்.

மேலும் முதலமைச்சர், பல்வேறு கட்சி தலைவர்கள், மத்திய அமைச்சர்கள், சினிமா நட்சத்திரங்களும், அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்று, அவரது உடல்குறித்து விசாரித்து செல்கின்றனர்.

முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பிசியோதெரபி சிகிச்சை அளித்து கை, கால்களை அசைப்பதற்கு பல்வேறு பயிற்சிகளை வழங்கி வருகிறார்கள். எழுந்து உட்காருவதற்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. விரைவில் நடப்பதற்கும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இந்நிலையில், நேற்று 47வது நாளாக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பிசியோதெரபி நிபுணர்கள் சீமா, ஜூடி ஆகியோர் எழுந்து உட்காரவும், நடக்கவும் பயிற்சி அளித்தனர். ஜெயலலிதா 3 மணி நேரத்திற்கும் மேல் செயற்கை சுவாசம் இல்லாமல் இயல்பாக மூச்சு விட்டார். படுக்கையில் இருந்து எழுந்து நிற்பதற்கு பழகினார் என பிசியோதெரபி நிபுணர்கள் தெரிவித்தனர்.