japan couple married in madurai
தமிழர்களின் கலாச்சாரத்தால் கவரப்பட்ட ஜப்பானைச் சேர்ந்த இளம் ஜோடி மதுரையில் இந்து முறைப்படி திருமணம் செய்துகொண்டனர்.
ஜப்பான் தலைநகரான டோக்கியோவைச் சேர்ந்தவர் யூடோ நினாகா. கல்வி நிறுவனம் ஒன்றில் பேராசிரியராகப் பணியாற்றும் இவர், அதே பகுதியைச் சேர்ந்த சிகாரு ஒபாதா என்ற பெண்ணை கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் செய்துகொண்டார்.
இந்நிலையில் தமிழால் ஈர்க்கப்பட்ட சிகாரு-யூடோ தம்பதி தமிழர் கலாச்சார பின்னணியில் இந்து முறைப்படி மதுரையில் திருமணம் செய்ய திட்டமிட்டனர். இதையடுத்து ஜப்பானில் தனக்கு தமிழ் பேச கற்றுத்தந்த மதுரை வில்லாபுரத்தை சேர்ந்த வினோதினியிடம் சிகாரு தெரிவித்துள்ளார்.
அவரது ஏற்பாட்டில் மதுரை ரயில் நிலையம் அருகேயுள்ள திருமண மண்டபத்தில் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டு ஜப்பான் ஜோடி மற்றும் அவர்களது உறவினர்கள் மதுரை வில்லாபுரம் வந்து தங்கினர்.
மணமகன் மற்றும் மணமகள் வீட்டார் தமிழர் கலாச்சாரப்படி வேஷ்டி, சேலை அணிந்திருந்தனர். தமிழ், ஜப்பான் மொழிகளில் திருமண அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டிருந்தது.
இந்து முறைப்படி முகூர்த்த நேரத்துக்கு முன் மணமக்கள் அருகேயுள்ள கோயிலில் இருந்து மங்கள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர். மணமகனுக்கு பட்டு வேஷ்டி, சட்டை, மணமகளுக்கு பட்டுச்சேலை அணிவித்திருந்தனர். யாகம் வளர்த்து தாலி கட்டி, அம்மி மிதித்து அருந்ததி பார்த்து இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.
தமிழர்களின் கலாச்சாரத்தை பறைசாற்றும் வகையில் ஜப்பான் ஜோடி தமிழர் கலாச்சாரப்படி இந்து முறையில் திருமணம் செய்துகொண்டது தமிழர் கலாச்சாரம் உலக அளவில் மதிக்கப்படுவதை உணர்த்துகிறது.
