வெள்ளத்தில் தத்தளிக்கும் அடையாறு தரைப்பாலம் - ஒரு நாள் மழைக்கே இந்த கதி...!
ஒருநாள் பெய்த மழைக்கே அடையாறு தரைப்பாலத்தை மூழ்கடித்து வெள்ள நீர் பாய்வதால் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் நேற்று முழுவதும் பலத்த மழை கொட்டி தீர்த்தது. அதைதொடர்ந்து சென்னை முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.
தென்மேற்கு வங்கக் கடலில் இலங்கை அருகே மையம் கொண்டு இருந்த வளி மண்டல மேலடுக்கு சுழற்சி அதே இடத்தில் மையம் கொண்டு இருப்பதால் சென்னை உள்பட தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் இன்றும் கன மழை பெய்யும் என சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நேற்று பெய்த பலத்த மழையால், மேடான பகுதிகளையும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. ஈக்காட்டுத்தாங்கலில் காசி தியேட்டர் அருகே உள்ள அடையாறு தரைப்பாலத்தை வெள்ள நீர் மூழ்கடித்து போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் அடைப்புகளை எடுக்க மாநகராட்சி ஊழியர்கள் தீவிரமாக முயற்சி செய்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2015ஆம் ஆண்டு பெய்த கனமழையில் அடையாறு ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஈக்காட்டுதாங்கலில் பல பகுதிகள் நீரில் மூழ்கியது குறிப்பிடத்தக்கது.