அணி அணியாய் திரளும் ஐ.டி ஊழியர்கள் – இரண்டு நாள் நாடு தழுவிய மாநாட்டிற்கு அழைப்பு...
சென்னை தரமணியில் நடக்கவிருகுக்கும் இரண்டு நாள் ஐ.டி ஊழியர்கள் நாடு தழுவிய மாநாட்டிற்கு உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது.
ஐ.டி துறையில் தற்போது நிலவும் நெருக்கடி குறித்து ஐ.டி. ஊழியர்கள் மாநாடு வரும் ஜூன் 17,18 ஆம் தேதிகளில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் சார்பில் சென்னை தரமணியில் நடைபெற உள்ளது.
இதுகுறித்து உலக தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இந்திய ஐ.டி. துறை கட்டமைப்புரீதியான ஒரு மாற்றத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பது உள்ளிட்ட வேறு சில காரணங்களால் பெருமளவிலான ஐ.டி. ஊழியர்கள் வேலை இழப்பை சந்திக்க இருப்பது உறுதியாகிவுள்ளது.
அடுத்த மூன்று வருடங்களில் துறையில் உள்ள 40 இலட்சம் ஊழியர்களில் 20 – 25% தொழிலாளர்கள் வேலை இழப்பைச் சந்திப்பார்கள் என்று நாஸ்காம் அறிவித்துள்ளது.
இந்தப் பின்னணியில் ஐ.டி. துறை சந்திக்கின்ற பிரச்சனைப் பற்றி ஆழமாக விவாதிக்கவும் ஐ.டி. துறை ஊழியர்களுக்கான கோரிக்கைகளை வந்தடையவும் ஜூன் 17,18 ஆகிய தேதிகளில் சென்னையில் ஐ.டி. தொழிலாளர்கள் மாநாட்டை நடத்தவிருக்கிறோம்.
40 இலட்சம் ஊழியர்களைக் கொண்ட ஐ.டி. துறையில் ஊழியர்கள் உரிமை மற்றும் வேலைப் பாதுகாப்புக்காக நடக்கவிருக்கும் முதல் மாநாடு இதுவே ஆகும்.
இம்மாநாட்டில் டெல்லி, மும்பை, கொல்கத்தா, ஐதராபாத், பெங்களூரு மற்றும் சென்னையிலிருந்து ஐ.டி. ஊழியர்கள், ஐ.டி. தொழிற்சங்க நிர்வாகிகள், தொழிற்சங்க மையங்களின் தலைவர்கள், சட்ட வல்லுநர்கள் என பிரதிநிதிகள் கலந்துகொண்டு விவாதிக்கவுள்ளனர்.
குறிப்பாக தில்லியில் இருந்து உச்சநீதிமன்ற வழக்கறிஞர் உஷா இராமநாதன், முன்னாள் நீதியரசர் அரிபரந்தாமன், மும்பையிலிருந்து டி.யு.சி.ஐ. செயலாளர் சஞ்சய் சிங்வி, சி.ஐ.டி.யு. மாநிலச் செயலாளர் கண்ணன், டி.டி.யு.சி. மாநிலத் தலைவர் ஜெ.சிதம்பரநாதன், , அனைத்திந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் தமிழ்நாடு செயலாளர் சி.பி. கிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.