கொடநாட்டில் தொடரும் கொலையின் மர்ம பின்னனி குறித்து விசாரணை தேவை - ஜி.ராமகிருஷ்ணன் பேச்சு
கொடநாடு எஸ்டேட்டில் நிகழும் மர்ம பின்னனி குறித்து நீதிபதி கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து விசாரிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமானது கொடநாடு எஸ்டேட். இங்கு காவலாளியாக வேலைப்பார்த்த ஓம் பகதூர் என்பவர் மர்ம நபர்களால் கடந்த ஏப்ரல் 24ம் தேதி கொலை செய்யப்பட்டார்.
மேலும் மற்றொரு காவலாளி படுகாயமடைந்தார். இந்த கொலை வழக்கில் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.
விசாரணையில் ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் உள்பட பலருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து டிரைவர் கனகராஜ் விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.
மற்றொரு குற்றவாளி சயான் காரில் தப்பியபோது, விபத்து ஏற்பட்டு அவரது மனைவி, 5 வயது குழந்தை ஆகியோர் உயிரிழந்தனர். ஆனால், சயான் படுகாயம் அடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
இதைதொடர்ந்து கொடநாடு எஸ்டேட்டில் கணினி இயக்குநகராக பணிபுரிந்து வந்த தினேஷ் என்பவர் இன்று தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
கொடநாடு எஸ்டேட்டில் வேலை பார்க்கும் ஊழியர்கள் அடுத்தடுத்து உயிரிழந்து வருவதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் கோவையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது, கொடநாடு எஸ்டேட்டில் நிகழும் மர்ம பின்னனி குறித்து நீதிபதி கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து விசாரிக்க வேண்டும் எனவும், மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் காலடியில் தமிழக அரசு தள்ளப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.