செல்லாத நோட்டு அறிவிப்பை திரும்ப பெற கோரியும், மத்திய அரசை கண்டித்தும் கரூரில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கரூர் மாவட்டத்தில், பழைய திண்டுக்கல் சாலையில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான ஒரு வங்கி முன்பு காங்கிரஸ் கட்சி சார்பில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்திக்கு கரூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் பேங்க். சுப்பிரமணியன் தலைமை வகித்தார். இனாம் கரூர் நகர தலைவர் ஸ்டீபன்பாபு முன்னிலை வகித்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், “பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்த நாள் முதல் மக்களின் அன்றாட வாழ்வாதாரம் சீர் குலைந்துள்ளது. இந்த அறிவிப்பைக் கண்டித்தும், அறிவித்ததை திரும்பப்பெற வேண்டும்” என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பினர்.
முன்னதாக ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் பழைய திண்டுக்கல் சாலையை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களிடம் காவல்துறையினர் சாலையோரம் நின்று ஆர்ப்பாட்டம் நடத்துங்கள் என்று கூறினர். இதே ஏற்காததால், காவலாளர்களுக்கும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனால் அந்த சாலையில் சென்ற வாகனங்கள் வேறு வழியாக திருப்பி விடப்பட்டு, சிறிது நேரம் போக்குவரத்து பாதித்தது.
