அரசின் மானிய விலையில் ஸ்கூட்டர் திட்டத்திற்கு இடைக்கால தடை- விரைவில் விசாரணை...
மதுரை
மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்துக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரைச் சேர்ந்த பி.ராம்குமார் ஆதித்தன் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், "தமிழகத்தில் மானிய விலையில் இரு சக்கர வாகனம் வழங்கும் திட்டம் பிப்ரவரி 24-ல் தொடங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் ஆண்டுக்கு ஒரு இலட்சம் பெண்களுக்கு இரு சக்கர வாகனம் வாங்க மானியம் வழங்கப்படும். இதனால் ஆண்டுக்கு அதிகபட்சம் அரசுக்கு ரூ.250 கோடி வரை செலவாகும். நடப்பாண்டில் ஒரு இலட்சம் வாகனங்களை பெற 3 இலட்சத்த் 36 ஆயிரத்து 104 பெண்கள் விண்ணப்பித்துள்ளனர்.
இந்த திட்டத்தில் பல்வேறு குளறுபடிகள் உள்ளன. ஏற்கெனவே இருசக்கர வாகனம் வைத்திருப்பவர்கள் மீண்டும் இரு சக்கர வாகனம் பெறுவதை தடுக்க விதிகள் இல்லை.
இரு சக்கர வாகனம் வாங்க ரூ.50 ஆயிரம் முதல் ரூ.75 ஆயிம் வரை செலவிட தயாராக இருந்தால் அவர் பொருளாதார ரீதியில் வலுவான நிலையில் உள்ளவர். இவர்களைப் போன்றவர்களுக்கு மானியம் வழங்க வேண்டியதில்லை.
திமுக ஆட்சியில் 1.72 கோடி இலவச கலர் டிவி மற்றும் இலவச கேஸ் இணப்பு, கேஸ் அடுப்பு வழங்க ரூ.3 ஆயிரத்து 942 கோடி செலவிடப்பட்டது.
அடுத்தவந்த அதிமுக ஆட்சியில் 5 ஆண்டுகளில் இலவச கிரைண்டர், மிக்சி, லேப்டாப், சைக்கிள், வேஷ்டி, சேலை வழங்க ரூ.1.20 இலட்சம் கோடி செலவு செய்யப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக தமிழக அரசின் நிதி நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. அரசின் நிதிப்பற்றாக்குறை அதிகமாக உள்ளது. இதனால் தமிழகத்தில் நிதிப்பற்றாக்குறை முழுமையாக நீங்கும் வரை பழைய இலவச திட்டங்களை தொடரவும், புதிய இலவச திட்டங்களை அமல்படுத்தவும் கூடாது.
மேலும், அதுவரை 50 சதவீத மானிய விலைக்கு இரு சக்கர வாகனம் வழங்கும் திட்டத்தை அமல்படுத்த இடைக்கால தடை விதித்தும் உத்தரவிட வேண்டும்" என்றும் அதில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.