போடியில், தொழில் போட்டியால் இரண்டு மோட்டார் சக்கர வாகனங்களுக்கு தீ வைத்த இரத்தப் பரிசோதனை மைய பங்குதாரர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

போடி சந்தை பேட்டைத் தெருவைச் சேர்ந்தவர் காந்தி (70). இவரது மகள் ராஜபிரிதா (38). இவர் போடியில் இரத்தப் பரிசோதனை மையம் நடத்தி வருகிறார். இதில் காந்தி என்பவர் மேற்பார்வையாளராக இருந்து வருகிறார்.

இந்த மையத்தில் வேலை செய்தவர் போடி அம்மாபட்டியைச் சேர்ந்த மணிவாசகம் மகன் சரவணன் (32). இவர் சில மாதங்களுக்கு முன் பிரிந்துச் சென்று தனியாக இரத்தப் பரிசோதனை மையம் நடத்தி வருகிறார்.

இது தொடர்பாக சரவணனுக்கும் காந்தி குடும்பத்திற்கும் முன் விரோதம் இருந்துள்ளது. கடந்த வாரம் சரவணனும் மற்றும் சிலரும் காந்தியின் வீட்டிற்குச் சென்று கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இந்த நிலையில் காந்தி குடியிருக்கும் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த ராஜபிரிதா மற்றும் பன்னீர்செல்வம் ஆகியோரின் இரு சக்கர வாகனங்கள் தீ வைக்கப்பட்டன.

இதில் இரண்டு மோட்டார் சக்கர வாகனங்களும் முழுமையாக எரிந்து நாசமாயின.

இதுகுறித்து காந்தி கொடுத்த புகாரின் பேரில் போடி நகர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் பாண்டியன் மற்றும் காவலாளர்கள் வழக்கு பதிவு செய்து சரவணனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.