பலத்த மழையால் ஒகேனக்கல் நீர்வரத்து அதிகரிப்பு; கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை…
தருமபுரி
காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் பலத்த மழை பெய்வதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 26000 கன அடியாக உயர்ந்து ஆற்றங்கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வருவதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிரித்தது.
நேற்று முன்தினம் கணக்குப்படி ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து விநாடிக்கு 17 ஆயிரத்து 500 கன அடியாக இருந்தது. இந்நிலையில் காவிரி நீர்பிடிப்புப் பகுதிகள் மற்றும் சின்னாற்று பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து மேலும் அதிகரித்து வருகிறது.
நேற்று பகலில் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 24 ஆயிரம் கன அடியாக இருந்த நிலையில் நேற்று மாலை நீர்வரத்து மேலும் அதிகரித்து விநாடிக்கு 26000 கன அடி நீர் வந்துக் கொண்டிருந்தது.
ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரித்து வருவதால் ஐந்தருவி, சினிபால்ஸ் அருவி, பிரதான அருவி ஆகியவற்றில் தண்ணீர் பெருக்கெடுத்துக் கொட்டியது.
இந்த நிலையில் தமிழக - கர்நாடக எல்லைப் பகுதியான பிலிகுண்டுலு பகுதியில் காவிரி ஆற்றில் நீர்வரத்தின் அளவை மத்திய நீர்வளத் துறையினர் தொடர்ந்து அளவீடு செய்து கண்காணித்தனர்.
நீர்வரத்து கணிசமாக அதிகரித்திருப்பதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளில் காவலாளர்கள் மற்றும் தீயணைப்புப் படையினர் தீவிர சுற்றுப் பணியில் ஈடுபட்டனர். ஆற்றங்கரையோப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
மேலும், சுற்றுலாப் பயணிகள் கரையோரம் குளிப்பதை தவிர்க்க வேண்டும் என்று காவலாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஆனால், ஒகேனக்கல் பிரதான அருவியில் குளிக்க எந்தவித தடையும் சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.