In farmers suicide case three judges change to superior bench
தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக மழை பொய்த்துவிட்டது. இதைதொடர்ந்து கடந்த ஆண்டு மழை அறவே இல்லாமல் போனதால், விவசாயம் முற்றிலும் பாதித்தது. விவசாயிகள் பலர் தற்கொலை செய்து கொண்டனர் என தினமும் செய்திகள் வெளியானது.
இதுதொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், விவசாயிகளின் மரணத்தில் மெத்தன போக்கு இருக்க கூடாது. அதனை தடுக்க புதிய வழிமுறைகளை கண்டறிய வேண்டும்.
விவசாயிகளின் தற்கொலையை தடுக்காமல் தமிழக அரசு மெத்தனம் காட்டுகிறது. விவசாயிகள் நாட்டின் முதுகெலும்பு. அவர்கள் தற்கொலை செய்து கொள்வது என்பது அதிர்ச்சியும், கவலையும் அளிக்கிறது. இது விவசாயிகளை காக்க வேண்டிய விஷயம் என கண்டனம் தெரிவித்தது.
மேலும், இது தொடர்பான அறிக்கையை உடனடியாக தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி இன்று தமிழக அரசு சார்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
அதில், இறந்த விவசாயிகள் யாரும் தற்கொலை செய்து கொள்ளவில்லை. 30 பேர், குடும்ப பிரச்சனையால் தற்கொலை செய்து கொண்டனர். 52 பேர் நீண்ட நாள் தீராத நோய், உடல் நிலை பாதிப்பு, சொந்த விவகாரத்தில் தற்கொலை செய்து கொண்டனர் என குறிப்பிட்டு இருந்தது.
இந்நிலையில், உச்சமன்ற நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் இரண்டு நீதிபதிகள் விசாரித்த இந்த வழக்கு, மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்கும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
வழக்கமாக 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிப்பது குறைந்த அளவிலான வழக்குகள் மட்டுமே. ஆனால், இந்த வழக்கை வரும் செவ்வாய்க்கிழமை முதல் விசாரிக்க இருப்பதாகவும், 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் விசாரணை நடப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதற்கான வழக்கு, மிக முக்கியத்துவமான வழக்காக கருதப்படுகிறது.
