தேன்கனிக்கோட்டையில் மனைவியின் நடத்தை மீது சந்தேகம் அடைந்து அவரது தலையில் அம்மிக்கல்லை போட்டுக் கொலைசெய்த கணவன், காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். அவரை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து பின்னர் சிறையில் அடைத்தனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை நேதாஜி சாலையைச் சேர்ந்தவர் மாதையன் (35). இவரது மனைவி இந்திராணி (34). இவர்களுக்கு ஸ்மிருதிராணி (15) என்ற மகளும், தனுஷ் (5) என்ற மகனும் உள்ளனர்.

கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

செவ்வாய்க்கிழமை அன்று இருவருக்குள்ளும் தகராறு பலத்தது. இதில் ஆத்திரம் அடைந்த மாதையன், இந்திராணி தலையில் அம்மிக்கல்லை தூக்கி போட்டு கொலை செய்து விட்டு தப்பி ஓடினார்.

இது தொடர்பாக தேன்கனிக்கோட்டை காவலாளர்கள் வழக்குப்பதிவு செய்து மாதையனை தேடி வந்தனர்.

இந்த நிலையில் மாதையன் தேன்கனிக்கோட்டை கிராம நிர்வாக அலுவலர் சரவணன் முன்னிலையில் புதன்கிழமை சரண் அடைந்தார்.

இதைத் தொடர்ந்து மாதையனை தேன்கனிக்கோட்டை காவலாளர்கள் கைது செய்தனர்.

கைதான மாதையன் காவலாளர்கள் வாக்குமூலம் அளித்துள்ளார். அதில், “எனக்கும், எனது மனைவி இந்திராணிக்கும் நீண்ட நாட்களாக குடும்ப பிரச்சனை இருந்தது. மேலும், அவளது நடத்தையின் மீது எனக்கு இருந்த சந்தேகத்தால் நான் எனது மனைவியை தடியால் தாக்கி பிறகு அம்மிக்கல்லை தலையில் போட்டு கொலை செய்து விட்டேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து கைதான மாதையனிடம் தேன்கனிக்கோட்டை காவல் இன்ஸ்பெக்டர் இலட்சுமணன், சப்-இன்ஸ்பெக்டர் பவுன்ராஜ் ஆகியோர் விசாரணை நடத்தினார்கள்.

பின்னர் மாதையனை தேன்கனிக்கோட்டை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.