Hundreds of people are sudden road block protest for drinking water
நாமக்கல்
நாமக்கல்லில், கடந்த 20 நாட்களுக்கும் மேலாக குடிநீர் விநியோகிக்கப்படாததால் பொறுமையிழந்த மக்கள் வெற்றுக் குடங்களுடன் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
நாமக்கல் மாவட்டம், கபிலர்மலை அருகே உள்ள இருக்கூரில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். தற்போது கோடைகாலம் தொடங்கி அக்னி நட்சத்திர வெயிலின் தாக்கமும் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் இந்த கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. குறிப்பாக இருக்கூர் ஊராட்சி மன்றம் மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வந்தது. கடந்த 20 நாட்களுக்கும் மேலாக குடிநீர் மின் மோட்டாரை இயக்கும் பணியாளர் சரிவர பணியில் ஈடுபடவில்லை. இதனால் மக்களுக்கு சரிவர குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை.
இதுகுறித்து ஊராட்சி மன்ற எழுத்தரிடம் மக்கள் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாததால் பொறுமையிழந்த நூற்றுக்கும் மேற்பட்ட அப்பகுதி மக்கள் நேற்று வெற்றுக் குடங்களுடன் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த பரமத்தி காவலாளர்கள் அங்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், "மின் மோட்டாரை இயக்கும் பணியாளரை வேலையில் இருந்து நீக்குவதாக உறுதியளித்தால் மட்டுமே போராட்டம் விலக்கி கொள்ளப்படும்" என்று மக்கள் கலைந்து செல்ல மறுத்தனர்.
அதையடுத்து காவலாளர்கள் மற்றும் ஊராட்சி மன்ற எழுத்தர் உரிய நபர் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த பின்னர் சாலை மறியல் கைவிடப்பட்டது.
