எச்.ராஜாவின் உருவ பொம்மைக்கு தீவைப்பு - திருவாரூரில் பல்வேறு இடங்களில் போராட்டம்...
திருவாரூர்
திருவாரூரில் பல்வேறு இடங்களில் எச்.ராஜாவை கண்டித்து அவரது உருவ பொம்மைக்கு தீ வைத்தும், அவரைக் கண்டித்தும் போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
திரிபுரா மாநிலத்தில் லெனின் சிலை அகற்றப்பட்டது தொடர்பாக பா.ஜ.க கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா தனது முகநூல் பக்கத்தில் "தமிழகத்தில் பெரியார் சிலையை அகற்ற வேண்டும்" என்று பதிவிட்டு இருந்தார்.
எச்.ராஜாவின் இந்தக் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவரைக் கண்டித்தும் திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
அதன்படி, கூத்தாநல்லூர் அருகே உள்ள வடபாதிமங்கலத்தில் மன்னார்குடி கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் குமரேசன் தலைமையில் பா.ஜனதா கட்சி தேசிய செயலாளர் எச்.ராஜாவின் உருவ பொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது எச்.ராஜாவை கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர்.
இந்தப் போராட்டத்தில் மன்னார்குடி கிழக்கு ஒன்றிய அவைத்தலைவர் அருண், மாவட்ட பிரதிநிதிகள் செல்வம், சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல திருத்துறைப்பூண்டி காமராசர் சிலை அருகே தி.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தி.க. மாவட்ட செயலாளர் பொன்முடி தலைமை தாங்கினார்.
தி.மு.க. நகர செயலாளர் பாண்டியன், டி.டி.வி.தினகரன் அணி நகர செயலாளர் தாஜீதீன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளர் முருகேசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளர் ரகுராமன், காங்கிரஸ் கட்சியின் நகர தலைவர் எழிலரசன் உள்பட பலர் பங்கேற்றனர்.
மற்றும் திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையம் அருகே அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் எச்.ராஜாவை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றியத் தலைவர் கணேஷ் தலைமை வகித்தார். நகர தலைவர் காந்தி, ஒன்றிய செயலாளர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட துணைச்செயலாளர் ராஜா மற்றும் பலர் பங்கேற்றனர்.