How much money will you have to pay for sand?

திருச்சி

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

காவிரி ஆற்றில் மணல் எடுக்க அனுமதிக்க வேண்டும் என்றும் அதற்கு அரசு நிர்ணயிக்கும் தொகையை செலுத்த தயாராக இருக்கிறோம் என்றும் மாட்டு வண்டி உரிமையாளர்கள் திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

திருச்சி மாவட்டம், முசிறி பகுதியில் இருந்து மாட்டு வண்டி உரிமையாளர்கள் சுமார் 70 பேர் நேற்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர், அங்குள்ள அதிகாரிகளிடம் கோரிக்கை மனு ஒன்றைக் கொடுத்தனர்.

அந்த மனுவில், "முசிறி நகரம் மற்றும் சுற்று வட்டார கிராம பகுதிகளில் வசித்து வரும் நாங்கள் சொந்தமாக வைத்துள்ள மாட்டு வண்டிகளின் மூலம் காவிரி ஆற்றில் மணல் எடுத்து விற்பனை செய்து வந்தோம்.

எங்களுக்கு மாட்டு வண்டி தொழிலை தவிர வேறு எந்தவித தொழிலும் தெரியாது. எங்களுக்கு விவசாய நிலங்களும் கிடையாது. மாட்டு வண்டியின் மூலம் விவசாயத்திற்கு தேவையான எரு மற்றும் செங்கல் ஏற்றி ஜீவனம் செய்து வந்தோம். கடந்த சில வருடங்களாக மழை பொய்த்து விட்டதால் எரு ஏற்றும் பணியும் செய்ய முடியவில்லை.

இந்த நிலையில் காவிரி ஆற்றில் மணல் அள்ளுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுவிட்டதால் நாங்கள் வாழ்வாதாரத்திற்கு வழி இன்றி தவித்து வருகிறோம். நாங்கள் கடன் பெற்றுதான் வண்டி, மாடுகள் வைத்து உள்ளோம். தற்போது எங்களால் கடனும் கட்ட முடியாமலும், அன்றாட வாழ்க்கை நடத்த முடியாமலும் அவதிப்பட்டு வருகிறோம்.

மாடுகளுக்கு தேவையான தீவன பொருட்களை கூட எங்களால் வாங்கி கொடுக்க முடியாத நிலையில் உள்ளதால் எங்களது மாடுகளை நாங்கள் இழந்து விடக்கூடிய சூழ்நிலையில் உள்ளோம்.

நாங்கள் ஏற்கனவே காவிரி ஆற்றில் எடுக்கும் மணலுக்கு உண்டான தொகையினை அரசுக்கு செலுத்தி வந்ததுபோல் தற்போதும் அரசு நிர்ணயிக்கும் தொகையை செலுத்த தயாராக இருக்கிறோம். அரசு விதிக்கும் நிபந்தனைகளுக்கு கட்டுப்படவும் தயாராக இருக்கிறோம்.

எனவே, காவிரி ஆற்றில் மாட்டு வண்டியில் மணல் எடுப்பதற்கு அனுமதி வழங்கும்படி கேட்டுக்கொள்கிறோம்" என்று அதில் கூறியிருந்தனர்.