பிளஸ் 2 தேர்வு எழுதிய ஆயுள் கைதிக்கு திடீர் நெஞ்சுவலி - புழல் சிறையில் பரபரப்பு
தமிழக சிறையில் உள்ள கைதிகளை நல்வழி படுத்துவதற்காக, சிறைத்துறை சார்பில் 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு கற்பிக்கப்பட்டு, பொது தேர்வு எழுத அதிமதிக்கப்படுகிறது. மேலும், கைதிகளுக்கு பல்வேறு கை தொழில் கற்று தரப்படுகிறது.
இந்நிலையில், இன்று முதல் தமிழகம் முழுவதும் பிளஸ் 2 தேர்வு, எழுதப்படுகிறது. இதையொட்டி சிறை கைதிகளும் பிளஸ் 2 தேர்வு எழுதுகின்றனர். இதற்கான தேர்வு மையம், புழல் மத்திய சிறைச்சாலையில் அமைக்கப்பட்டுள்ளது.
இதைதொடர்ந்து வேலூர் 8, கோவை 13, திருச்சி 15, மதுரை 11, புதுக்கோட்டை 5, சேலம் 9, பாளையங்கோட்டை 10, கடலூர் 3 என கைதிகள் நேற்று இரவு பலத்த பாதுகாப்புடன் புழலுக்கு அழைத்து வரப்பட்டு, இன்று தேர்வு எழுதுகின்றனர். இவர்களுடன் புழல் சிறையில் உள்ள கைதிகள் 24 பேரும் எழுதுகின்றனர்.
இதற்கிடையில், பிளஸ் 2 தேர்வு எழுதி கொண்டிருந்த கருணாகரன் (47) என்ற கைதிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனால், அவர் அலறி துடித்தார். உடனே அங்கிருந்த சிறை காவலர்கள், அவரை மீட்டு சிறை வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளித்தனர்.
பின்னர், அவரை ஆம்புலன்ஸ் மூலம், சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
நெஞ்சுவலியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கருணாகரன், மதுரை சிறையில் ஆயுள் கைதியாக இருந்து வருகிறார். தற்போது, அவருக்கு பிளஸ் 2 தேர்வு எழுதும்போது நெஞ்சுவலி ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.