வருமானவரித்துறை அலுவலகத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆஜர்…!!!
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சம்மன் அனுப்ப்பட்டதை அடுத்து வருமானவரித்துறை அலுவலகத்தில் அவர் ஆஜராகியுள்ளார்.
கடந்த மாதம் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.
மேலும் டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைகழக துணைவேந்தர் கீதாலட்சுமி, மற்றும் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வீடு, அலுவலகங்களில் சோதனை மேற்கொண்டனர்.
இதில் விஜயபாஸ்கர் வீட்டில் இருந்து முறைகேடு தொடர்பாக பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அதில் ஆர்.கே.நகரில் பணபட்டுவாடா செய்ததற்கான ஆதாரங்களும் அடங்கும்.
இதையடுத்து, விஜயபாஸ்கர், அவரது மனைவி ரம்யா, அவரின் தந்தை ஆகியொரிடம் வருமான வரித்துறை விசாரணை நடத்தியது.
மேலும் விஜயபாஸ்கர் தந்தையின் கல்குவாரியில் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டது. அதிலும் பல்வேறு ஆதாரங்கள் சிக்கியதாக தெரிகிறது.
இதைதொடர்ந்து அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நேற்று மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டது. அதில், இன்று நேரில் ஆஜராகுமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், அமைச்சர் விஜயபாஸ்கர் வருமான வரித்துறை அலுவலத்தில் ஆஜராகியுள்ளார். அவரது தந்தை கல்குவாரியில் சிக்கிய ஆவணங்கள் குறித்து விசாரணை இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக விஜயபாஸ்கரின் தம்பி உதயகுமாரும் அவரின் உதவியாளரும் வருமானவரித்துறை அலுவலகத்தில் ஆஜராகினர் என்பது குறிப்பிடத்தக்கது.