GST should be canceled immediately on the sale of dry fish - fisher women protest
நாகப்பட்டினம்
கருவாடு விற்பனையில் மத்திய அரசு ஜி.எஸ்.டி. வரியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று பழையாறு துறைமுகத்தில் மீனவப் பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகப்பட்டினம் மாவட்டம், கொள்ளிடம் அருகே உள்ளது பழையாறு மீன்பிடி துறைமுகம். இங்கு நாள்தோறும் கடலில் பிடிக்கப்படும் மீன்கள் விற்பனைச் செய்ததுபோக, மீதமுள்ள மீன்களை கருவாடாக உலர வைத்துத் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு விற்பனைக்காக அனுப்பப்படுகிறது.
கருவாடு உலர வைத்தல், அதனை வியாபாரம் செய்தல் போன்ற வேலைகளில் மட்டும் சுமார் ஐந்தாயிரம் பேர் ஈடுபட்டுள்ளனர். கருவாடு உலர வைக்கும் பணியில் சுற்றுவட்டாரக் கிராமங்களைச் சேர்ந்தத் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். நாள்தோறும் பழையாறு துறைமுகத்தில் இருந்து சுமார் 5 டன் முதல் 8 டன் வரை நாள்தோறும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.
இந்த நிலையில்தான் கருவாடு விற்பனைக்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனை உடனடியாக ரத்து செய்யக்கோரி பழைய துறைமுகத்தில் நேற்று திமுக மீனவர் அணியின் நாகை மாவட்ட அமைப்பாளர் தமிழ்ச்செல்வன் தலைமையில் மீனவ பெண்கள் மற்றும் கருவாடு வியாபாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது மாவட்ட அமைப்பாளர் தமிழ்ச்செல்வன் கூறியது:
“கருவாடு அழுகக் கூடிய உணவு வகையைச் சேர்ந்தது. இதன் விலை நாள்தோறும் மாறுபடும். பழையாறு துறைமுகத்தில் மட்டும் 200–க்கும் மேற்பட்ட மீனவப் பெண்கள் கருவாடு விற்பனை செய்து வருகின்றனர்.
இப்பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு சம்பளம் உள்ளிட்ட இதர செலவுகள் போக லாபம் மிக குறைவாகவே கிடைக்கும்.
இந்த நிலையில் 5 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டுள்ளதால் வெளியூர்களில் வரும் வியாபாரிகள் கருவாடுகளை வாங்க மறுக்கின்றனர். இதனால் கருவாடுகள் விற்பனையாகாமல் தேங்கி உள்ளன. மேலும், துறைமுகத்தில் கருவாடு பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே, மத்திய அரசு கருவாடு விற்பனையில் விதிக்கப்பட்டுள்ள ஜி.எஸ்.டி. வரியை உடனடியாக திரும்ப பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.
