பட்டப் படிப்பு முடித்தவர்கள் வேலையில்லாமல் ‘சும்மா’ இருக்கக் கூடாது. எதாவது வேலை செய்யுங்கள் என்கிறார் ஆட்சியர்...
திருவண்ணாமலை
கல்லூரி படிப்பு முடித்தவர்கள் வேலையில்லாமல் ‘சும்மா’ இருக்கக் கூடாது. ஏதாவது ஒரு வேலையை செய்ய வேண்டும் என்று ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி கூறினார்.
இந்திய இரயில்வே துறையில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு நடைபெற உள்ளது. இந்த காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வரும் 31-ஆம் தேதி (சனிக்கிழமை) கடைசி நாளாகும்.
இந்த தேர்வு இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது. அதன்படி, முதற்கட்ட தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பு திருவண்ணாமலை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக வளாகத்தில் நேற்று தொடங்கியது.
இந்த விழாவிற்கு மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் விஜயா முன்னிலை வகித்தார். ஆசிரியர்கள் பாரதி, அரிகிருஷ்ணன் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.
இதன் தொடக்க விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி தலைமை தாங்கி, குத்துவிளக்கேற்றி பயிற்சி வகுப்பினை தொடங்கி வைத்துப் பேசினார்.
அப்போது அவர், "போட்டித் தேர்வுகளில் பங்கேற்க உள்ளவர்கள் கடின முயற்சிக்கு முக்கியத்துவம் செலுத்த வேண்டும். அதற்கான திறனை நாம் வளர்த்து கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு மனிதர்களுக்கும் வாழ்வில் முன்னேற்றம் அடைவதற்கு ஒரு நேரம் வரும். அந்த நேரம் யாருக்கு எப்போது வரும் என்று தெரியாது. ஆனால், அது வரும்போது அதனை நாம் தக்க வைத்து கொள்ள வேண்டும்.
கல்லூரி படிப்பு முடித்துவிட்ட பிறகு வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துவிட்டோம். இன்னும் வேலை கிடைக்கவில்லையே என்று யாரும் எண்ணக்கூடாது.
தற்போது அரசு மட்டுமின்றி தனியார் நிறுவனங்கள் வேலை வாய்ப்பிற்கு ஆட்கள் எடுக்கும்போது போட்டி தேர்வு வைத்துதான் தேர்வு செய்கின்றனர். இது போட்டிகள் நிறைந்த காலம். திறமை உள்ளவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கும் காலம் இது.
போட்டித் தேர்வுகளில் கலந்துகொள்ள உள்ளவர்கள் அதற்கான பாட புத்தகத்தினை மட்டும் படிக்காமல், செய்தித்தாள்களை படித்து உள்ளூர் மட்டுமின்றி உலகளவிலான தகவல்களையும் அறிந்து கொள்ள வேண்டும்.
கல்லூரி படிப்பு முடித்தவர்கள் வேலையில்லாமல் ‘சும்மா’ இருக்கக் கூடாது. அரசு வேலை கிடைக்கும் வரை ஏதாவது ஒரு வேலையை செய்ய வேண்டும்" என்று அவர் பேசினார்.
இந்த விழாவின் இறுதியில் இளநிலை வேலை வாய்ப்பு அலுவலர் மோகன்ராஜ் நன்றித் தெரிவித்தார்.