பைக் சாவி தரலென்னா குதிச்சுடுவேன் – தம்பிக்கு செல்போன் கோபுரத்தில் ஏறிய அண்ணன் தற்கொலை மிரட்டல்…
கன்னியாகுமரி
நாகர்கோவிலில் தம்பியின் உணவகத்தில் வேலை பார்க்கும் அண்ணனின் பைக் சாவியை தம்பி வாங்கி வைத்துக் கொண்டதால் செல்போன் கோபுரத்தில் ஏறிய அண்ணன், பைக் சாவியை தராவிட்டால் குதித்துவிடுவேன் என்று தற்கொலை மிரட்டல் விடுத்தார்.
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் கிருஷ்ணன்கோவில் அறுகுவிளையைச் சேர்ந்தவர் மகபூப் சுபுகானி (35). இவர் பார்வதிபுரம் பகுதியில் உணவகம் (ஓட்டல்) நடத்தி வருகிறார்.
இவருடைய அண்ணன் கலீல் ரகுமான் (45). ஆசாரிபள்ளம் பகுதியில் வசித்து வருகிறார். இவர் மகபூப் சுபுகானி உணவகத்தில் பரோட்டா மாஸ்டராக வேலை செய்து வந்தார்.
கலீல் ரகுமான் தனது தம்பியிடம் ஒரு மோட்டார் சைக்கிள் வாங்கித் தருமாறும், அதற்குரிய பணத்தை தனக்கு தரும் சம்பளத்தில் கொஞ்சம், கொஞ்சமாக பிடித்தம் செய்து கொள்ளுமாறும் கூறியுள்ளார். அதன்படி மகபூப் சுபுகாணியும் மோட்டார் சைக்கிள் வாங்கிக் கொடுத்துவிட்டு, அதற்காக சம்பளத்தில் ஒரு தொகையைப் பிடித்தம் செய்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த சில நாள்களாக கலீல் ரகுமான் வேலைக்குச் செல்லாததால் மகபூப் சுபுகானி இரவு நேரத்தில் அண்ணன் வீட்டுக்குச் சென்று ஏன் வேலைக்கு வரவில்லை? என்று கேட்டுத் திட்டியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த கலீல் ரகுமான் நேற்று மதியம் தம்பியின் உணவகத்திற்கு வந்து வாய்த் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவருடைய தம்பி, கலீல் ரகுமானுக்கு வாங்கிக் கொடுத்த மோட்டார் சைக்கிளின் சாவியை வாங்கிக் கொண்டாராம்.
இதனால் ஆத்திரம் அடைந்த கலீல் ரகுமான், தம்பி நடத்தி வந்த ஓட்டலின் மாடியில் உள்ள ஒரு செல்போன் கோபுரத்தில் ஏறினார். பின்னர் அவர் தனது தம்பி மோட்டார் சைக்கிளின் சாவியை தராவிட்டால் நான் இங்கிருந்து குதித்து தற்கொலை செய்துகொள்வேன் என்று கூறி மிரட்டி உள்ளார்.
இதுபற்றிய தகவலறிந்த வடசேரி காவலாளர்கள் அங்கு வந்து ஒரு சாவியை கலீல் ரகுமானிடம் காண்பித்து அவரை கீழே இறங்குமாறு கூறினர். உடனே அவரும் கீழே இறங்கி வந்தார்.
பின்னர் காவலாளர்கள் அவரைப் பிடித்து வடசேரி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.