giant tree fell down across road stopped Transport more than two hours

நீலகிரி

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

நீலகிரியில் உள்ள மசினகுடி - தெப்பக்காடு நெடுஞ்சாலையில் சாலையில் குறுக்கே இராட்சத மரம் ஒன்று விழுந்தது. இதனால் இரண்டு மணிநேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதால் நீலகிரியின் கூடலூர், மசினகுடி, முதுமலைபுலிகள் காப்பகம் உள்ளிட்டப் பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 

நேற்று மசினகுடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழையால் மசினகுடி - தெப்பக்காடு நெடுஞ்சாலையில் காலை 6 மணிக்கு சாலையின் குறுக்கே இராட்சத மரம் ஒன்று விழுந்தது. 

இதனால் இந்த சாலையில் வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு இருபுறமும் வாகன நெரிசல் ஏற்பட்டது. அணிவகுந்து நின்ற வாகனங்களால் இப்பகுதியில் பெரும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. 

பின்னர் இதுகுறித்து நெடுஞ்சாலை துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டதன்பேரில் மசினகுடி காவலாளர்கள், வனத்துறையினர், நெடுஞ்சாலைத் துறையினர் மற்றும் மசினகுடி லாரி ஓட்டுநர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். 

அதன்பின்னர் சாலையின் குறுக்கே விழுந்துகிடந்த மரத்தை வெட்டியெடுத்து அகற்றும் பணியை மேற்கொண்டனர். இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக அந்த மரம் வெட்டி அகற்றப்பட்டது. அதன்பின்னரே போக்குவரத்து சீரானது. வாகன ஓட்டிகளும் அப்பாடா என்று பெருமூச்சு விட்டுவிட்டு அங்கிருந்து கிளம்பினர்.