ஒரே நேரத்தில் 500 பேர் பயன்படுத்த கூடிய இலவச வைஃபை சேவை தொடக்கம். எங்கு?
திருநெல்வேலி
திருநெல்வேலி, சங்கரன்கோவில் பேருந்து நிலையத்தில் ஒரே நேரத்தில் 500 பேர் பயன்படுத்த கூடிய இலவச வைஃபை வசதியை தொடங்கி வைத்த அமைச்சர் ராஜலட்சுமி, இதனை நகரம் முழுவதும் விரிவுப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.
இந்தியாவிலேயே முதன்முறையாக டிஜிட்டல் அட்வெர்டைசிங் தொழில் நுட்பத்துடன் கூடிய இலவச வைஃபை வசதி தொடக்க நிகழ்ச்சி திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் பேருந்து நிலையத்தில் நடந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி முன்னிலை வகித்தார். அமைச்சர் ராஜலட்சுமி தலைமை தாங்கி, வைஃபை வசதியை தொடங்கி வைத்தார்.
அதன்பின்னர் அவர் பேசியது: "இந்த இலவச வைஃபை வசதியை ஒரே நேரத்தில் 500 பேர் பயன்படுத்த இயலும். எட்டு மெகா பைட்ஸ் வேகத்தில் இந்த சேவை வழங்கப்படுகிறது. ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு 1 மணி நேரம் இலவசம். 600 மீட்டர் சுற்றளவுக்கு இந்த சேவை கிடைக்கும்.
இந்த சேவையின்போது தமிழக அரசின் விளம்பரங்கள், விழிப்புணர்வு செய்திகள் வெளியிடப்படும். மேலும், தமிழக அரசின் இணையதளங்களும், மொபைல் அப்ளிகேசன்களும் இலவசமாக 24 மணி நேரமும் கிடைக்கும்.
அதனைத் தொடர்ந்து மாவட்டத்தில் முன்மாதிரி நகரமாக, சங்கரன்கோவில் நகர் முழுவதும் இந்த இலவச வைஃபை வசதியானது விரிவுபடுத்தப்பட உள்ளது" என்று அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சிகளில் நகரசபை ஆணையாளர் தாணுமூர்த்தி, தாசில்தார் ராஜேந்திரன், முன்னாள் நகரசபை துணை தலைவர் கண்ணன், நகர செயலாளர் ஆறுமுகம் உள்பட பலர் பங்கேற்றனர்.