கஞ்சா விற்கும் மையமாக மாறிய ரயில்வே நடை மேம்பாலம் - கண்டு கொள்ளாத போலீசார்
ரூ.1.2 கோடியில் கட்டி முடித்த ரயில்வே நடைமேம்பாலம் பயணிகளின் பயன்பாட்டுக்கு வராமல், கஞ்சா விற்கும் மையமாக செயல்படுகிறது. இதனை தடுக்க வேண்டிய அதிகாரிகள் மெத்தனமாக உள்ளதால், பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
திருநின்றவூர் பேரூராட்சி மற்றும் அதனை சுற்றி 50க்கு மேற்பட்ட நகர் மற்றும் கிராம பகுதிகள் உள்ளன. இந்த பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், திருநின்றவூர் ரயில் நிலையத்தை பயன்படுத்தி மின்சார ரயில் மூலம் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
தினமும் 30 ஆயிரத்துக்கு மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், தொழிலாளர்கள், வியாபாரிகள், விவசாயிகள், அரசு மற்றும் தனியார் கம்பெனி ஊழியர்கள் பயன் பெறுகின்றனர். இந்த ரயில் நிலையத்தில் 6 வழி ரயில் தடம் உள்ளது. எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு 2 தடமும், புறநகர் மின்சார ரயிலுக்கு 4 தடம் உள்ளது.
இந்த ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் சரிவர இல்லாமல் உள்ளது. இதனை சிரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர். இதையடுத்து ரயில்வே துறை சார்பில், கடந்த சில மாதங்களுக்கு முன் ரூ.1 கோடியில் நடை மேம்பாலத்துடன் கூடிய பயணச்சீட்டு அலுவலகம் கட்டி முடிக்கப்பட்டது. ஆனால், இதுவரை பயன்பாட்டுக்கு கொண்டு வரவில்லை.
ஏற்கனவே இங்குள்ள நடைமேம்பாலத்தில் உள்ள 2 டிக்கெட் கவுன்ட்டரில் ஒன்று மட்டும் செயல்படுகிறது. மற்றொன்று நிரந்தரமாக மூடியே கிடக்கிறது. இதனால், பயணிகள் காலை மற்றும் மாலை நேரங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து, டிக்கெட் வாங்கி செல்கின்றனர். அதற்குள் அவர்கள் செல்ல வேண்டிய ரயில் வந்து, சென்று விடுகிறது. இதையடுத்து மீண்டும் பிளாட்பாரத்தில் சுமார் ஒரு மணிநேரம் காத்திருக்கும் அவலநிலை உள்ளது.
இதுபோன்று காத்திருக்கும் மக்களுக்கு டிக்கெட் கவுன்ட்டர் பகுதியில் இருக்கை வசதி இல்லை. இதனால், மூட்டை முடிச்சு, குழந்தை, குட்டிகளுடன் தரையில் அமர்ந்துவிடுகின்றனர்.
இங்கு அரக்கோணத்தில் இருந்து சென்னை செல்லும் விரைவு மின்சார ரயில்கள் நிற்பது கிடையாது. இதனால், அந்த ரயிலில் பயணம் செய்யும் பொதுமக்கள், ஆவடியில் இறங்கி, மற்றொரு மின்சார ரயிலை பிடித்து மீண்டும் திரும்பி வரவேண்யுள்ளது.
மேலும் 1வது பிளாட்பாரம் அருகில், தண்டவாளத்தையொட்டி சுற்றுச்சுவர் அமைக்கவில்லை. ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு சுற்றுச்சுவர் அமைக்க நிதி ஒதுக்கி, டெண்டர் விடப்பட்டும் இதுவரை எவ்வித பணியும் தொடங்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால், அவ்வழியாக செல்லும் பயணிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.
பழைய ரயில்வே நடைமேம்பாலத்தை பொதுமக்களும், பயணிகளும் சரிவர பயன்படுத்துவதில்லை. இதனால், சமூக விரோதிகள் சிலர், அந்த பகுதியில் இரவு, பகல் பார்க்காமல் கஞ்சா விற்பனையை அமோகமாக நடத்தி வருகின்றனர். இதையொட்டி அங்கு அடிக்கடி அடிதடி உள்பட பல்வேறு தகராறுகள் ஏற்படுகிறது.
இங்கு ரயில்வே போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினர் சரிவர ரோந்து பணியில் ஈடுபடுவது இல்லை. இதனால் குற்ற சம்பவங்கள் அதிகரிக்கிறது.
6வது ரயில்வே பாதை அருகில், கூடுதல் நடைமேடை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுளளது. ஆனால், இதுவரை டெண்டர் விடப்பட்டு எவ்வித பணியும் தொடங்காமல் உள்ளது. 3வது பிளாட் பாரத்தில் ரயில்வே அலுவலக கட்டிடங்கள் அதிகமாக உள்ளன. இதனால் பயணிகள், காலை மாலை நேரங்களில் நிற்க இடம் இல்லை. இருசக்கர வாகனம் நிறுத்து் இடத்தில் மேற்கூரை இல்லை. இதையொட்டி மழை மற்றும் வெயில் காலங்களில் அங்கு நிறுத்தப்படும் வாகனங்கள் கடும் சேதம் அடைகிறது.
புதிய நடைமேம்பாலம் மக்கள் பயன்பாட்டுக்கு வராததால், பயணிகள் ஆபத்தான முறையில் தண்டவாளத்தை கடந்து செல்கின்றனர். இதனால் அடிக்கடி ரயிலில் சிக்கி படுகாயம் அடைகின்றனர்.ரயில் நிலையத்தின் அருகில் உள்ள தனியார் நிறுவனத்தில் இருந்து, ரயில்வே மழைநீர் கால்வாயில் விடப்படுகிறது. இதனால், அந்த பகுதியில் கடும் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
மேற்கண்ட பிரச்னைகள் குறித்து பயணிகள் நலச்சங்கம் சார்பில், ெதன்னக ரயில்வே அதிகாரிகளுக்கு பலமுறை, புகார் செய்துள்ளனர். ஆனால், அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக உள்ளனர். இதைதொடர்ந்து திருநின்றவூர் பயணிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
எனவே, மேற்கண்ட பிரச்னைகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து திருநின்றவூர் ரயில் நிலையத்தில் புதிய பயணச்சீட்டு அலுவலகம், நடை மேம்பாலம், டிக்கெட் கவுன்ட்டர் திறக்கவும், கஞ்சா விற்பனையை தடுக்கவும், இருக்கைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரவும் வேண்டு–்ம் என பயணிகள் வலியுறுத்துகின்றனர்.